யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, தற்போது ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த செய்தியுடன் தொடர்புபடுத்தி தமிழ் செய்தி ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
பரவிய செய்தி
ரஷ்ய தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள்; ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம்!






விரிவான விளக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30 2025) அதிகாலையில் 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல ஈக்வடார், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும், ஹவாய் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அளவில் சுனாமி ஏற்படக்கூடிய அபாயமிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழ் ஊடகங்கள் இந்த நிலநடுக்கம் குறித்தும் சுனாமி எச்சரிக்கை குறித்தும் சில வீடியோக்கள் புகைப்படங்களைக் கொண்டு செய்தி வெளியிட்டனர்.






உண்மை என்ன?
முதலில், பெண் ஒருவர் கடையில் அமர்ந்திருக்கும் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள பொருட்கள் எல்லாம் சரிந்து விழுவது போன்ற புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடுயதில், ‘2025 Sagaing Earthquake Archive’ என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.

2025 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், இந்த சம்பவம் மியான்மரில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து தேடுகையில், ‘BBC’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, கடந்த 2025 மார்ச் 28ஆம் தேதியன்று மியான்மரில் உள்ள மாண்டலே என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது. இதிலிருந்து இந்த வீடியோ 2025 மார்ச் மாதம் மியான்மரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக கடற்கரை ஒன்றில் சிறிய படகுகளை புரட்டி அடித்துச் செல்லும் பெரிய அலைகள் போன்ற புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் தேடியதில், ‘Licet Studios’ என்ற யூடியூப் தளத்தில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ள இதன் வீடியோவைக் காண முடிந்தது. அதில் இந்த வீடியோ கிரீன்லாந்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு தேடியதில், ‘Pulitzer Center’ என்ற செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், 2017 ஜூன் மாதம் கிரீன்லாந்தில் 100 மீட்டர் உயர சுனாமி தாக்கியது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த வீடியோ 2017ஆம் ஆண்டு கிரீன்லாந்தில் சுனாமி ஏற்பட்ட போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

அடுத்ததாக, தென்னைமரங்கள் வரிசையாக இருக்கும் கடற்கரையில் பெரிய அலைகள் மோதும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் தேடியதில், ‘Expresso Show’ என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில் இந்த வீடியோ ‘Durban North Beach’-ல் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேடியதில், ‘News 24’ என்ற செய்தித்தளத்தில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ‘Durban North Beach’-ல் மிகப் பெரிய அலைகள் (High Tides) ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, இந்த வீடியோ ‘Durban North Beach’-ல் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இறுதியாக, வெள்ளை நிற டால்பின் போன்ற ஐந்து உயிரினங்கள் கடற்கரையில் ஒதுங்கியிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ரஷ்யாவின் கம்சட்கா கடற்கரையில் ஐந்து பெலுகாக்கள் சில நாட்களுக்கு முன்பு சிக்கித் தவித்ததாகவும், இது தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையில் நடந்ததா? என்று தினகரன் செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தேடியதில், ’Newsweek’ செய்தித்தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 2023 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், இந்த வீடியோக் காணக்கிடைக்கிறது. இது குறித்து மேலும் தேடியதில், ரஷ்யாவின் வடக்கு கம்சட்காவின் டிகில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் ஒதுங்கிய கடல்வாழ் உயிரினுமான பெலுகாக்களை அங்குள்ள மீனவர்கள் காப்பாற்றியதாக தெரிகிறது. இதிலிருந்து இந்த வீடியோ இரண்டு ஆண்டுகள் பழையது என்பதும் இதற்கும் தற்போது ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் தொடர்பு ஏதுமில்லை என்பதும் தெளிவாகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றுக்கும் இன்று ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, தற்போது ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை குறித்த செய்தியுடன் தொடர்புபடுத்தி ’புதிய தலைமுறை’, 'தினகரன்’, ’தந்தி டிவி’, ’News தமிழ்’, ’தீக்கதிர்’ ஆகிய தமிழ் செய்தி ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.