யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த விபத்து கடந்த 2025 டிசம்பர் மாதம் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கழகூட்டம் என்ற பகுதியில் நடந்தது.
பரவிய செய்தி
’கோவை குனியமுத்தூர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற காரின் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியது’ - ‘பாலிமர்’, ’குமுதம்’, ’News தமிழ்’ ஆகிய செய்தி ஊடகங்கள்.


விரிவான விளக்கம்
சாலையை கடக்க முயன்ற கார் ஒன்றின் பக்கவாட்டில் மஞ்சள் நிற தனியார் பள்ளி பேருந்து ஒன்று மோதி சில அடிகள் தூரம் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சியை பதிவிட்டு, கோவை குனியமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஜனவரி மாதத்தில் இச்சம்பவம் நடந்ததாக ‘பாலிமர்’, ’குமுதம்’, ’News தமிழ்’ ஆகிய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த செய்தி வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, மலையாள செய்தித்தளமான ’Media One TV’ யூடியூப் தளத்தில் 2025 டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியைக் காணமுடிகிறது.

தமிழ் செய்திஊடகங்கள் வெளியிட்டுள்ள அதே CCTV காட்சியை பதிவிடப்பட்டுள்ள இந்த செய்தியில், இந்த சம்பவம் கேரளாவின் ’கழகூட்டம்’ (Kazhakoottam) என்ற பகுதியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடுகையில், ’Asianet News மலையாளம்’ செய்தித்தளத்தில் டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில் திருவனந்தபுரம் நகரில் உள்ள ’கழகூட்டம்’ என்ற பகுதியில் இந்த விபத்து நடந்ததாகவும் இதனால் அலெக்சாண்டர் (72) என்ற கார் ஒட்டுநருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும், பள்ளி பேருந்தில் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் கடந்த 2025 டிசம்பர் மாதம் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கழகூட்டம் என்ற பகுதியில் நடந்தது என்பது தெரிய வருகிறது.
முடிவு:
கடந்த 2025 டிசம்பர் மாதம் கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடந்த விபத்தை தற்போது கோவை குனியமுத்தூரில் நடந்ததாக ‘பாலிமர்’, ’குமுதம்’, ’News தமிழ்’ ஆகிய செய்தி ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டிருக்கின்றன.