யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
போண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட கொலையாளியின் புகைப்படத்திற்கு பதிலாக மற்றொரு அப்பாவி இளைஞரின் புகைப்படம் தவறாக பரப்பப்பட்டிருக்கிறது. இதனை எவ்விதமான சோதனைக்கு உட்படுத்தாமல் இந்த தவறான செய்தியை ’தமிழ் ஜனம்’ செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.
பரவிய செய்தி
சிட்னி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டத்தின் போது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்ட சிட்னி காவல்துறை. பாகிஸ்தானை சேர்ந்தவர் என அதிர்ச்சி தகவல். - ’தமிழ் ஜனம்’


விரிவான விளக்கம்
கடந்த 14ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் யூதர்களின் பண்டிகையான 'ஹனூக்கா’ கொண்டாடத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 16 பேர் இறந்து போனதாகவும், 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த துப்பாக்கி சூடு யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் என்று ‘தமிழ் ஜனம்’ செய்தித்தளம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அந்த இளைஞரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி என்றும் பரப்பப்பட்டு வருகிறது.

Pakistan. A terrorist production line pic.twitter.com/2K3IpmK9Ts
உண்மை என்ன?
சிட்னியில் ஹனூக்கா கொண்டாடத்தின் போது யூதர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். அப்போது ‘The Times of India’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதன்படி, ‘போண்டி கடற்கரையில் துப்பாக்கி சூடு நடத்தியது சஜீத் அகரம் மற்றும் நவீத் அக்ரம் என்ற தந்தை மகன் என்பது தெரிய வருகிறது. அதில் சஜீத் அகரம் (50) துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார் என்பதும், இவரது மகனான நவீத் அக்ரம் (24) மருத்துவமனை இக்கட்டான நிலையில் உள்ளதாகவும்’ தெரியவருகிறது.

இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நவீத் அக்ரம் குறித்த செய்திகளை தேடியபோது, ’Daily Mail’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ’Daily Mail’ பத்திரிகையிடம் வீடியோ வழியாக பேசிய நவீத் அக்ரம் என்ற இளைஞர் கூறுகையில், “துப்பாக்கி சூடு நடத்திய கொலையாளியின் புகைப்படத்திற்கு பதிலாக என்னுடைய புகைப்படம் பயன்படுத்தப்படுவது குறித்து அறிந்தபோது அதிர்ச்சியடைந்தேன், என்னால் வெளியில் எங்கும் செல்லமுடியவில்லை, நான் பாதுபாப்பற்று உணர்கிறேன்’ என்று கூறுகிறார். மேலும் தன்னுடைய இந்த நிலையை போலீஸ்க்கு விளிக்கி கூறியுள்ளார் நவீத் அக்ரம்.

இந்த நவீத் அக்ரம் என்ற இளைஞர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும், ”இந்த துப்பாக்கி சூட்டிற்கு எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய புகைப்படம் தவறாக பரப்பப்படுகிறது” என்று தன்னிலை விளக்கமளித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரின் பெயர் ’நவீத் அக்ரம் (24)’ என்று போலீஸ் அறிவித்த நிலையில், ’நவீத் அக்ரம்’ என்ற அதே பெயருடைய 30 வயது இளைஞடைய புகைப்படத்தைக் கொண்டு இவர் தான் துப்பாக்கி சூடு நடத்திய கொலையாளி என்று சமூக வலைத்தளத்தில் தவறாக பரவ ஆரம்பித்திருக்கிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, கொலையாளியான நவீத் அக்ரம்-ன் புகைப்படத்திற்கு பதிலாக அதே பெயருடைய மற்றொருவரின் புகைப்படம் செய்திகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதனை எவ்விதமான சோதனைக்கு உட்படுத்தாமல் இந்த தவறான செய்தியை ’தமிழ் ஜனம்’ செய்தித்தளம் வெளியிட்டுள்ளதும் தெரிய வருகிறது.
முடிவு:
போண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட கொலையாளியின் புகைப்படத்திற்கு பதிலாக நவீத் அக்ரம் என்ற மற்றொரு அப்பாவி இளைஞரின் புகைப்படம் தவறாக பரப்பப்பட்டிருக்கிறது. இதனை எவ்விதமான சோதனைக்கு உட்படுத்தாமல் இந்த தவறான செய்தியை ’தமிழ் ஜனம்’ செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.