யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தில் சிறுபான்மையின பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று வலதுசாரிகளால் தற்போது வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
பரவிய செய்தி
வங்கதேசத்தில், இந்த பெண் இந்துவா? கிறிஸ்தவமா? என்று தெரியவில்லை. மொத்தத்தில் அங்கே சிறுபான்மையினரின் நிலை இதுதான். தமிழகத்தில் திருட்டு திராவிடங்களை கொண்டாடும் இந்துக்கள் திருந்தப்போவதில்லை. தொலையட்டும். அதே திருட்டு திராவிடங்களை கொண்டாடும் பாவாடைகள் அவசியம் பார்க்கவும்..
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் இந்துக்கள் அங்குள்ள முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப்படுவதாக பல வீடியோக்கள் தவறாக சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அங்குள்ள சிறுபான்மையின பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வலதுசாரிகளால் தற்போது வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
பரவி வரும் வீடியோவில், பெண் ஒருவர் தன்னுடைய வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.
வங்கதேசத்தில்தான் இந்த அவலம்.. இந்த பெண் இந்துவா கிறிஸ்தவமா என்று தெரியவில்லை. மொத்தத்தில் அங்கே சிறுபான்மையினரின் நிலை இதுதான்.... pic.twitter.com/qDgd7hmnqM
— L Kannan ( தனி ஒருவன் ) (@L_IMKannan) August 7, 2024
Welcome to new bangladesh#HindusAreNotSafeInBangladesh #HindusUnderAttack #Hindus #SaveHindusinBangladesh #SaveBangladesiHindus #AllEyesOnBangladeshiHindus#HelpBangladeshiHindus#helpbangladeshisanatani pic.twitter.com/3CZwuu1aV7
— 🇮🇳Jitendra pratap singh🇮🇳 (@jpsin1) August 7, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இதன் உண்மையான வீடியோ ‘JnU Short Stories’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.

இந்த வீடியோவின் மூலம், அபந்திகா என்ற பெண்ணின் தற்கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடத்தப்பட்ட நாடகக் காட்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை அறியமுடிந்தது. வீடியோவில் இருப்பவர் அந்த நாடகத்தில் நடித்தவரும், 2021-22 கல்வியாண்டில் வங்கதேசத்தில் உள்ள ஜெகநாத் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவியும் ஆவார். நாடகக் காட்சியை, உண்மையான சம்பவம் என்று நினைத்து பலரும் வங்கதேச கலவரத்தோடு தொடர்புபடுத்தி இந்த வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் ‘Channel 24 News’ என்ற பேஸ்புக் பக்கத்தில், #justiceforabantika என்ற ஹேஷ்டேக் குறிப்பிடப்பட்டு, அபந்திகாவின் மரணத்திற்கு நீதி கேட்டு விளக்குடன் ஜெகநாத் பல்கலைக்கழக மாணவர்கள் அணிவகுப்பு செல்லும் வீடியோ கடந்த மார்ச் 18 அன்று பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவின் ஆரம்பத்திலும், பரவி வரும் வீடியோவில் உள்ளவாறே பெண்கள் வாயை ஒரு பிளாஸ்திரியால் மூடிக்கொண்டு அசையாமல் நின்று போராட்டம் செய்வதைக் காணமுடிகிறது.
இதே போன்று 'Channel 24' யூடியூப் பக்கத்தில் அபந்திகாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்ட வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. சரியாக வீடியோவின் 49 வது வினாடியில், பரவி வரும் வீடியோவில் இருக்கும் மாணவி இதிலும் இடம்பெற்றிருப்பதை தெளிவாக காண முடிகிறது.

எனவே கடந்த மார்ச் மாதம், ஜெகநாத் பல்கலைக்கழக மாணவியான அபந்திகாவின் இறப்புக்கு நீதி கேட்டு மாணவர்கள் அரங்கேற்றிய நாடகக்காட்சியை உண்மையான சம்பவம் என்று நினைத்து, வங்கதேச கலவர சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தில் சிறுபான்மையின பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பரவும் வீடியோ, வங்கதேச கலவர சம்பவத்தோடு தொடர்புடையது அல்ல என்பதை அறியமுடிகிறது.
