யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது. முபாரக் அப்படிப் பேசவும் இல்லை, நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் அப்படி எந்த செய்தியும் வெளியிடவுமில்லை.
பரவிய செய்தி
இந்து அறநிலதுறை மற்றும் மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃ போர்டு நிலங்கள் மீட்க படும் - எஸ்டிபிஐ

விரிவான விளக்கம்
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாக நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்படுகிறது. ”இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மடங்கள், கோவில்கள் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃப் நிலங்கள் மீட்கப்படும்” என்று முபாரக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய நியூஸ் 18 தமிழ்நாடு கார்டில் எழுத்துப் பிழைகள் உள்ளன. இது குறித்து நியூஸ் 18 ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் தேடினோம். இப்படி எந்த கார்டையும் அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும் பரவக் கூடிய கார்டில் எழுத்துரு வடிவம் மற்றும் அளவு நியூஸ் 18 கார்டில் இருந்து மாறுபட்டு இருப்பதையும் காண முடிந்தது. இதிலிருந்து பரவக் கூடிய நியூஸ் கார்டை நியூஸ் 18 ஊடகம் வெளியிடவில்லை என்பது உறுதியாகிறது.
மேற்கொண்டு SDPI மாநில தலைவர் முபாரக் செய்தியாளர் சந்திப்பில் ஏதேனும் கூறியுள்ளாரா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். அப்படி எதுவும் அவர் பேசவில்லை. ஊடகத்தில் வெளியான செய்தி போன்று முபாரக் பேசாத கருத்தைப் போலியாக உருவாக்கி மத பிரிவினையைத் தூண்டும் வகையில் வதந்தி பரப்பப்படுகிறது.
முடிவு:
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மடங்கள், கோவில்கள் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃப் நிலங்கள் மீட்கப்படும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது. முபாரக் அப்படிப் பேசவும் இல்லை, நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் அப்படி எந்த செய்தியும் வெளியிடவுமில்லை.