யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது 2022ம் ஆண்டு வெளியான செய்தி. மேலும் அந்த கணிப்பின்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
அடுத்த 60 நாட்களில் (நவம்பர், டிசம்பர்) அணு ஆயுதம் வெடிக்கும் என நாஸ்டர்டாமஸ் கணித்துள்ளதாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. மேலும் அந்த செய்தியில் 3-ம் உலகப் போர் ஏற்பட்டு பூமியில் பல நாடுகள் மறைந்துவிடும் என்றும் உலகம் 3 நாட்களுக்கு இருளில் மூழ்கும் என்றும் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் ’சத்தியம் டிவி’ என்ற லோகோ இருப்பதைக் காண முடிகிறது. அது மட்டுமின்றி ’31.10.2022’ என்ற தேதியும் அதில் உள்ளது. இதனை கொண்டு தேடியதில், சத்தியம் டிவி யூடியூப் பக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட அந்த செய்தியைக் காண முடிந்தது.
அந்த செய்தியில் மனிதக்குலம் மீண்டும் கற்காலத்திலிருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கும் என்ற தகவல்களும் இடம் பெற்றுள்ளது. இரட்டை கோபுரம் தகர்ப்பு, ஹிட்லரின் எழுச்சி எனப் பல வரலாற்று நிகழ்வுகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த நாஸ்டர்டாமஸ் தான் இதனையும் கணித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்படுகிறது.
நாஸ்டர்டாமஸ் என்பவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவர் எழுதிய ’லெஸ் புரோபெடீஸ்’ (Les Prophéties) என்ற புத்தகத்தில் தற்போது பூமியில் நடக்கும் பல வரலாற்று நிகழ்வுகள் பற்றிய முன் கணிப்புகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவரது கணிப்புகளின்படியே அந்த நிகழ்வுகள் நடந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது. அதாவது இரட்டை கோபுரம் இடிப்பு, இங்கிலாந்து அரசர் சார்லஸ் அரச பதவியிலிருந்து விலகியது எனப் பல நிகழ்வுகளைக் குறிப்பிடுவதுண்டு.
நாஸ்டர்டாமஸ் தனது புத்தகத்தில் பொதுவாக எழுதியதை வரலாற்று நிகழ்வுகளுக்கு ஏற்ப பொருத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். உதாரணமாக, உடல் நலக் குறைவால் அரசர் பதவியிலிருந்து விலகி யாரும் எதிர் பார்க்காத ஒருவர் அரச பதவியில் அமருவார் என்றும் எழுதியிருப்பது இங்கிலாந்து அரசர் சார்லசுடன் பொருத்திப் பேசப்படுகிறது. இதே சூழலைத் தமிழ்நாட்டில் உடல் நலத்தால் பாதிக்கப்பட்டு இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் அவரை தொடர்ந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் பொருந்தும்.
கடந்த முறை (2020) அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்ப் வெற்றி பெறுவார் என நாஸ்டர்டாமஸ் கணிப்பில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். கொரோனா தொற்று குறித்தும் இப்படியான கதைகள் பரப்பப்பட்டன. நாஸ்டர்டாமஸ் பொதுவாக எழுதியதை நடக்கின்ற நிகழ்வுகளுக்கு ஏற்ப பொருத்திக்கொள்கின்றனர்.
ஒருவேளை 2022-ம் ஆண்டு நாஸ்டர்டாமஸ் கணிப்பு என வெளியான செய்தியின்படி நடந்திருந்தால் இன்று நாம் இந்த செய்தியை இணையத்தில் படித்துக் கொண்டு இருக்க மாட்டோம். கற்காலத்தில் வேட்டை சமூகமாக இருந்திருப்போம். இதிலிருந்தே இது வெறும் கற்பனை கட்டுக்கதை என்பதை அறியலாம். அவரது கணிப்புகள் பொத்தாம் பொதுவாக எழுதப்பட்டவை மட்டுமே.
முடிவு:
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று நாஸ்டர்டாமஸ் கணிப்பில் இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது எனப் பரவும் செய்தி 2022ம் ஆண்டு வெளியானது. அந்த கணிப்பில் உள்ள எந்த நிகழ்வும் நடக்கவில்லை. நாஸ்டர்டாமஸ் கணிப்பு என்பவை பொதுவாக எழுதப்பட்ட ஒரு கற்பனை குறிப்புகள் மட்டுமே. எந்த ஒரு நிகழ்வையும் குறிப்பிட்டு அவர் எழுதவில்லை.
