யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இயக்குநர் மாரி செல்வராஜ் இவ்வளவு சம்பாதித்த பிறகும் தனது அக்கா மகன்களை வாழை சுமக்க வைப்பதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது. அச்சிறுவர்கள் மாரியின் ஊரைச் சேர்ந்தவர்கள்.
பரவிய செய்தி
இந்த படத்துல நடிச்சவங்க மாரியோட அக்கா பசங்க. இத்தனை படம் பண்ணி இவ்வளவு சம்பாரிச்சு இந்த பசங்களை இன்னும் வாழைக்காய் தூக்க வச்சிருக்கிறது தான் மாறி செல்வராஜோட புரட்சி…

விரிவான விளக்கம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’வாழை’ என்ற திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. வாழை தோப்பில் சுமை கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பொன்வேல்-ராகுல் என்ற இரண்டு புதுமுக சிறுவர்கள் உட்பட கலையரசன், திவ்யா துரைசாமி எனப் பலர் நடித்துள்ளனர்.
இச்சிறுவர்கள் மாரி செல்வராஜின் அக்கா மகன்கள் என்றும் மாரி இத்தனை திரைப்படங்களை இயக்கி சம்பாதித்த பிறகும் இந்த பசங்களை வாழைக்காய் சுமக்க விடுவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
வாழை திரைப்படத்தில் சிவனைந்தன்- சேகர் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவர்கள் ’சினிமா விகடனுக்கு’ நேர்காணல் அளித்துள்ளனர். அந்த நேர்காணல் யூடியூப் பக்கத்திலும் உள்ளது.
நேர்காணலில் பொன்வேல் பேசுகையில், மாரி செல்வராஜை பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ‘மாரி சார்’ என்றுதான் அச்சிறுவன் குறிப்பிடுகிறார். மேலும் பள்ளி விடுமுறை தினங்களில் வாழைக்காய் சுமக்கச் செல்வது பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
பிறகு ராகுல் பேசுகையில், ”மாரி சாரை எங்களுக்குத் தெரியவே தெரியாது. பரியேறும் பெருமாள் படம் எடுக்கும்போதுதான் அவரை முதல்முறையாகப் பார்த்தேன். அதற்கு முன்னர் பார்த்ததில்லை” எனக் கூறுகிறார்.
அதாவது அச்சிறுவர்கள் மாரி செல்வராஜின் ஊரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. ஆனால், இவர்கள் மாரி செல்வராஜின் அக்கா மகன்கள் எனத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
முடிவு:
வாழை திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் மாரி செல்வராஜின் அக்கா மகன்கள் என சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல் உண்மை அல்ல. அச்சிறுவர்கள் மாரி செல்வராஜை பரியேறும் பெருமாள் படப்பிடிப்பு தளத்தில்தான் முதன்முதலில் பார்த்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.