யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பயன்தரும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை அரசு தொடங்கிவிட்டு, தற்போது பள்ளிப்பாட புத்தகங்களின் விலையை அரசு உயர்த்திவிட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
தமிழ் புதல்வன் திட்டத்தில் 1000 கொடுத்துவிட்டு மாணவர்களிடம் 5000 பிடுங்கும் விடியா திமுக ஸ்டாலின் அரசு.. இதுக்கு.. இந்த மானங்கெட்ட அரசு..
விரிவான விளக்கம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில், அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 09 அன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை அரசு தொடங்கிவிட்டு, தற்போது பள்ளி பாடப்புத்தகங்களின் விலையை அரசு உயர்த்திவிட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் புகைப்படத்தில், பாடப்புத்தகங்களின் விலைப்பட்டியல் பழைய விலை, புதிய விலை என்று குறிப்பிடப்பட்டு வகுப்புவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
பாட புத்தகங்களின் விலையை சுமார் 30 சதவீதம் வரை உயர்த்திய விடியா திமுக அரசு,
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) August 13, 2024
ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என கிளம்பினால் கூடவே விலையை உயர்த்துவது தான் மக்கள் நலத்திட்டமா @mkstalin ? pic.twitter.com/sKZScbO40G
குடிச்சாலும் பணம்
— Sanghi Prince 🚩 (@SanghiPrince) August 12, 2024
படிச்சாலும் பணம்
ஸ்டாலின் மகிழ்ச்சி ❤️#தமிழகம்_மீட்போம் pic.twitter.com/CFEBZYSIuA
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவா்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிந்தது.
தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கான பாடநூல்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகின்றன. பின்னர் அவை தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் அச்சிடப்பட்டு பள்ளி மாணவா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2018-2019ஆம் கல்வியாண்டில் புத்தகங்களின் விலை இறுதியாக திருத்தியமைக்கப்பட்ட நிலையில், தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு விலை மறுநிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனியாா் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழக்கம்போல் தடையின்றி வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளனர் என்பதை தினமணி வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறியமுடிந்தது.
எனினும், பாடநூல் விலையேற்றத்துக்கு தனியார் பள்ளிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.

மேலும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளிக்கையில், “2018ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை ஒவ்வொரு ஆண்டும் உயரும் என்பதால், மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கணக்கில்கொண்டு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பாடப்புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறையாகும்.
எனவே 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இலாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தக தயாரிப்புக்கான விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.“ என்றும் கூறியுள்ளார்.
முடிவு:
நம் தேடலில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவா்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், அவர்களுக்கு விலையில்லா புத்தகங்களே வழக்கம்போல் வழங்கப்படும் என்பதையும் அறியமுடிகிறது
