யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இளைஞர் ஒருவருடன் அவரது இன்ஸ்டாகிராம் காதலி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சண்டையிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை, விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் பெண் பயணி ஒருவரை பலவந்தமாக டாக்ஸிக்கு இழுத்து செல்வதாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இது திமுக ஆளும் தமிழ்நாடு. டாக்சி மாஃபியாக்கள் பயணிகளை கார்களில் ஏற்ற எப்படி கட்டாயப்படுத்துகிறார்கள், காவல்துறை விமான நிலையங்களில் முகவர்களாக எப்படி செயல்படுகிறார்கள் என்று பாருங்கள். டாக்சி ஓட்டுநர்கள் விமான நிலையங்களில் பெண்களை வலுக்கட்டாயமாக பிடித்து வாடகை வண்டிகளில் எப்படி இழுத்துச் செல்கிறார்கள் என்று பாருங்கள். பாதுகாப்பு '0' பெண்களுக்கு மரியாதை '0'.. மாஃபியா ஆட்சி 100% இது தான் பெரியார் மாதிரியா?
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் காவலர்களின் ஒத்துழைப்புடன், டாக்சி மாஃபியாக்கள் பயணிகளை கார்களில் ஏற்ற எப்படி கட்டாயப்படுத்துகிறார்கள் பாருங்கள் என்று கூறி 56 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில் பெண் ஒருவருடன் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், அதற்கு அந்தப் பெண் கையை விடு, கையை விடு என்று கத்துவதையும் தெளிவாகக் காண முடிகிறது.
This is DMK-ruled Tamil Nadu! 🚨
At airports, cab mafias force passengers into cars while police act like their agents.
Women are being dragged & harassed openly!
Safety = 0 ❌
Respect for women = 0 ❌
Mafia rule = 100% ✅
Is this the so-called Periyar Model? 🤔 pic.twitter.com/Wy0Th2wuuG
#TamilNadu❓Cab mafias are forcing passengers into their cabs & Police acting as agents of #CabMafia at airports.
Look how cab drivers are forcibly dragging women into cabs at airports.
‘0’ Safety & ‘0’ Respect for women in #Periyar's Model State?😡🤬 pic.twitter.com/BtcbLiK12I
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “கோவை விமான நிலையத்தில் INSTA காதலி ஆவேசம்” என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளைக் குறிப்பிட்டு ‘Polimer News’ கடந்த மார்ச் 27 அன்று செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
இதே போன்று, ‘விகடன்’ இணையதளப் பக்கத்திலும் பரவி வரும் வீடியோக் காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த மார்ச் 27 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “தொழிலதிபர் ஒருவரின் மகனான அந்த இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் அந்த இளம்பெண்ணுடன் பழகி இருவரும் காதலித்துள்ளனர். பிறகு இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதால் அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர் இந்த பெண்ணுக்கு தாலி கட்டி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மற்றொரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதால், அவர் ஆத்திரமடைந்து விமான நிலையத்தில் பிரச்னை செய்துள்ளார். இது குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம், இளைஞர் ஒருவருடன் அவரது இன்ஸ்டாகிராம் காதலி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சண்டையிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை அறிய முடிகிறது. இந்நிலையில் காதல் விவகார வீடியோவை, விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் பெண் பயணி ஒருவரை பலவந்தமாக டாக்ஸிக்கு இழுத்து செல்வதாகக் கூறி சமூக ஊடகங்களில் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், ‘தமிழ்நாட்டில் ‘பெண்களுக்கு பாதுகாப்பில்லை’, ‘டாக்ஸி மாஃபியா’ என்று குறிப்பிட்டு பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.