யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பச்சைப் புரட்சி என்று முழக்கமிட்டதாகவும், கிலாபத் போராட்டம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்போவதாக சபரிமாலா பேசியுள்ளாகவும் பரவும் செய்திகள் தவறானவை
பரவிய செய்தி
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பச்சைப் புரட்சி என்று முழக்கமிட்டுள்ளனர், கிலாபத் போராட்டம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்போவதாக சபரிமாலா பேசியுள்ளார்.- ஸ்ரீ டிவியில் பால கவுதமன்.
விரிவான விளக்கம்
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பச்சைப் புரட்சி என்று முழக்கமிட்டதாகவும், கிலாபத் போராட்டம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்போவதாக சபரிமாலா பேசியதாகவும் கூறி ஸ்ரீ டிவியில் பால கவுதமன் என்பவர், அபுபக்கர் என்பவர் கூறியதாகக் கூறி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளவாறு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், “Naalai Namadhe News” யூடியூப் பக்கத்தில் ஹிஜாபுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்த வீடியோ கடந்த 2022-ல் வெளியிடப்பட்டிருந்தது.
அதில் மாணவர்கள், “மக்கள் புரட்சி ஜிந்தாபாத்“ என்றே முழக்கமிடுகின்றனர். இதனை திரித்து, மாணவர்கள் போராட்டத்தின் போது பச்சை புரட்சி என்று கூறியதாகக் கூறி தவறாகத் திரித்து பரப்பியுள்ளனர்.
இதே போன்று, கிலாபத் போராட்டம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்போவதாக சபரிமாலா பேசியுள்ளாரா என்பது குறித்து அறிய, அதன் முழு வீடியோவைத் தேடினோம். “1400ஏக்கர் கல்விப்பணிக்கு தந்த வள்ளல் காதர்முகைதீன் அவர்கள்” என்ற தலைப்பில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியை நிர்வகித்து வரும் MKN அறக்கட்டளை வளாகத்தில் சபரிமாலா பேசியிருந்த வீடியோ, “அழகிய முன்மாதிரி“ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “கலிபா உமரின் நல்லாட்சி அமையும்” என்றே சபரிமாலா பேசியுள்ளார். இதைத் திரித்து “கிலாபத்துக்கான போராட்டம் இந்த வளாகத்திலிருந்துதான் தொடங்கப்போகிறது.” என்று அவர் சொன்னதாக பால கவுதமன் அவதூறு பரப்பியுள்ளார்.
முடிவு:
நம் தேடலில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பச்சைப் புரட்சி என்று முழக்கமிட்டதாகவும், கிலாபத் போராட்டம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்போவதாக சபரிமாலா பேசியுள்ளாகவும் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.