யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எங்குமே பயிர்க்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.
பரவிய செய்தி
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 11.40 லட்சம் விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திருக்கிறார் முதல்வர் விஜய்!

விரிவான விளக்கம்
தவெக தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ளவற்றில் விவசாய கடன் தள்ளுபடி முக்கியமானதாகும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் அவர்களது நிலவுரிமை வரம்பின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படுவதாக தவெகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; 5 ஏக்கருக்குக் அதிகமாக நிலம் இருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தவெக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த மே 25ஆம் தேதி விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டதாக ‘புதிய தலைமுறை’ ஊடகம் உட்பட பலர் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன?
முதல்வர் விஜய் அறிவித்த விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த செய்திகளைத் தேடியபோது, மே 25ஆம் தேதி ‘தினமணி’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது.

அதில், கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட 50,000 ரூபாய் வரையிலான பயிர் கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறு விவசாயிகள் 50,000 வரை கடன் பெற்றிருந்தால் அது முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், சிறு விவசாயிகள் 50,000 வரை கடன் பெற்றிருந்தால் 50 சதவீதம், அதாவது 25,000 மட்டும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 50,000 ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு, கடன் தொகையின் அளவைப் பொறுத்து வெவ்வேறு விகிதங்களில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |@imrajmohan | pic.twitter.com/2goDiraEKa
மேலும், தமிழ்நாடு அரசின் ’செய்தி மக்கள் தொடர்புத் துறை’ வெளியிட்டுள்ள ஆவணத்திலும் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கியுள்ள பயிர்க்கடனின் அளவைப் பொறுத்து தள்ளுபடி விகிதங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் எங்குமே பயிர்க்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லப்படவே இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது.
அதேபோல், ‘புதிய தலைமுறை’ செய்தி ஊடகம் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த செய்தியில் முன்னுப்பின் முரணான தகவல்களை வெளியிட்டுள்ளது.
முதல்வர் விஜய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது பற்றி ‘புதிய தலைமுறை’ வெளியிட்டுள்ள அந்த செய்தியின் முதல் பகுதியில், ’விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது; செய்தியின் கடைசி பகுதியில் ’குறு விவசாயிகளுக்கு 50,000 வரையில் கடன் தள்ளுபடி, சிறு விவசாயிகளுக்கு 50,000 கடனில் 25,000 தள்ளுபடி’ என்று வேறு விதமாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
முடிவு:
பயிர்க்கடன் தொகையின் அளவைப் பொறுத்து சிறு, குறு விவசாயிகளுக்கு வெவ்வேறு விகிதங்களில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை மறைத்து, விவசாயக் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட்டதாக தவறான செய்தியை பரப்புகிறார்கள்.