யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கேரளாவில் பாதிரியார் ஒருவர் சினிமா பாடல் பாடியதை, தமிழ்நாட்டில் உள்ள பள்ளியில் நடந்ததாக மத ரீதியாகப் பொய் செய்தி பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு தான் குடுக்க கூடாது.. மத்தபடி இப்படி "காவாளியா, காவாளியா"ன்னு கூத்தடிக்கலாம் இல்லையா திராவிட மாடல் அமைச்சரே?

விரிவான விளக்கம்
சில தினங்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி ஒன்றில் மகாவிஷ்ணு என்பவர் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியமே இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கிறோம் என்கிற வகையில் பேசி இருந்தார். இக்கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மகாவிஷ்ணுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வலதுசாரிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டிலுள்ள ஒரு பள்ளியில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் சினிமா பாடல் பாடி நடனம் ஆடியதாகவும் இதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காது என்றும் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் ‘jesus_love_you_07’ என்கிற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அப்பக்கத்தில் உள்ள இந்த வீடியோவில் மேடையில் உள்ள பேனரில் மலையாள மொழியில் எழுத்துக்கள் உள்ளன.
மேற்கொண்டு வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், ’achanum_pillerum’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ கடந்த ஜூன் மாதம் பதிவிடப்பட்டுள்ளது. வேறொரு பாதிரியாரின் இன்ஸ்டாகிராம் பக்கமான அதில் ’வாழப்பள்ளி’ என்கிற ஊர்ப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ளது.
இதே வீடியோ கேரளாவை மையமாகக் கொண்டு செயல்படும் வேறொரு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கடந்த மார்ச் மாதம் பதிவிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து இது கேரளாவில் நடந்தது என்பதை அறிய முடிகிறது. சரியாக எங்கு நடந்தது? என்ன நிகழ்ச்சி? பாடலை பாடியவர் யார்? என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை. தகவல் கிடைக்கும் பட்சத்தில் அதனைக் கூடுதல் தகவலாக இக்கட்டுரையில் இணைப்போம்.
இருப்பினும் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்வைத் தமிழ்நாட்டில் நடந்தது எனத் தவறான தகவலைக் கொண்டு மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்தி பரப்பப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் உள்ள பள்ளியில் பாதிரியார் ஒருவர் சினிமா பாடல் பாடியதாகவும் இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. இது கேரளாவில் எடுக்கப்பட்ட வீடியோ.