யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ பழைய வீடியோ என்பதும், வீடியோவில் இருப்பது டாஸ்மாக் கடை அல்ல என்பதும் பூஜை செய்யும் நபர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நபர் அல்ல என்பதும் அதிகாரப்பூர்வமாக தெரியவருகிறது.
பரவிய செய்தி
ஓ இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? டாஸ்மாக்குக்கு ஐயரை கூட்டி வந்து யாகம் வளர்க்கும் பகுத்தறிவு திமுக அரசு!

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் பல சட்டப் போராட்டங்கள் மக்கள் போராட்டங்களுக்கு பிறகு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பல்வேறு கோவில்களில் பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த 28 பேரை அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமித்தது.
இந்நிலையில், மதுகடை ஒன்றில் அர்ச்சகர் ஒருவர் யாகம் செய்யும் வீடியோவை பதிவிட்டு, ’அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் அர்ச்சகரான ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் யாகம் வளர்ப்பதாக’ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
ஓ இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
டாஸ் மார்க்குக்கு ஐயரை கூட்டி வந்து யாகம் வளர்க்கும் பகுத்தறிவு திமுக அரசு 😂😂 pic.twitter.com/22mR3dH9ru
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘பேஸ்புக்’ தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. இந்த வீடியோ 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதிலிருந்து, இந்த வீடியோ கிட்டதட்ட நான்காண்டுகள் பழையது என்பது தெரியவருகிறது.

மேலும் தேடியதில், ’தினத்தந்தி’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், பரப்பப்படும் இந்த வீடியோ குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வீடியோவில் இருப்பது டாஸ்மாக் கடையே அல்ல என்றும், அந்த பூஜை செய்யும் நபர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நபரும் அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ’TN Fact Check’ தளத்தில் தேடியதில், இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டிருப்பது உண்மை தான் என்பதைக் காண்கிறோம்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ பழைய வீடியோ என்பதும் டாஸ்மாக் கடையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நபரை வைத்து பூஜை செய்யப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதும் உறுதியாகிறது.
முடிவு:
மதுக்கடைக்கு அர்ச்சகர் வைத்து பூஜை செய்யப்படும் நான்கு ஆண்டுகள் பழைய வீடியோவை பதிவிட்டு, தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் கடையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நபரை வைத்து பூஜை செய்யப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.