யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பொங்கல் மதம் கடந்த பண்டிகை அதனை அனைத்து மதத்தினரும் கொண்டாட வேண்டும் என்று அவர் பேசியதின் ஒரு பகுதியை வெட்டி திரித்துப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
பொங்கல் ஒரு இந்து பண்டிகை... தமிழ் முஸ்லிம்கள் கொண்டாடக்கூடாது.... அரசிடம் இருந்து பொங்கல் தொகுப்பும் வாங்கக்கூடாது. இதை நான் சொல்லவில்லை. விசிக தலைவன் முஸ்லிம் பய ஷானவாஸ் கூறுகிறான்.

விரிவான விளக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி சட்டமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான ஆளூர் ஷாநவாஸ் பேசிய வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அப்பதிவில், 'பொங்கல் ஒரு இந்து பண்டிகை என்றும் அதனை முஸ்லிம்கள் கொண்டாடக்கூடாது’ என்றும் ஷாநவாஸ் பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் ஒரு இந்து பண்டிகை...
தமிழ் துலுக்கனுங்க கொண்டாடக்கூடாது.... அரசிடம் இருந்து பொங்கல் தொகுப்பும் வாங்கக்கூடாது.
இதை நான் சொல்லவில்லை.
விசிக தலைவன் துலுக்க பய ஷானவாஸ் கூறுகிறான். pic.twitter.com/MX5VY4Jbmb
வீடியோவில், “பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இம்மக்கள் அவர்களுடைய சமய நம்பிக்கைகளிலிருந்து இந்த கொண்டாட்டத்தைக் கொண்டாடுகிறார்கள். அதாவது சூரியனுக்குப் படையல் வைப்பது, சூரியனை வணங்குவது, மாடுகளை வணங்குவது என்று சடங்கிற்குள் கொண்டு சென்றதின் விளைவு, கடவுள் மறுப்பாளர்கள் ஓர் இறைவனைத் தவிர மற்றவர்களை வணங்கக் கூடாது என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள், கிறித்தவர்கள் இவர்களுக்கெல்லாம் அதில் சிக்கல் வருகிறது. இது தமிழர் திருநாள், இயற்கையைப் போற்றும் திருநாள், விவசாயிகளை மதிக்கும் திருநாள் என்கிற அடையாளத்தோடு நின்றிருந்தால் பிரச்சனை இல்லை. இது குறிப்பிட்ட மத அடையாளம், சடங்குகளைத் தூக்கிப் பிடிக்கிறபோது சிக்கல் வருகிறது” என ஷாநவாஸ் பேசுகிறார்.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ குறித்துத் தேடியதில், இதன் முழுமையான வீடியோவை 2016ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ஆளூர் ஷாநவாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. நக்கீரன் ஊடகத்தின் வாயிலாக ஷாநவாஸ் பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்த வீடியோதான் இது.
அப்பதிவில், “பொங்கல், தமிழர் திருநாள் எனும்போது, தமிழராய் இருக்கும் முஸ்லிம்களும் கிறித்தவர்களும் அதைக் கொண்டாட ஆர்வம் காட்டாதது ஏன்? பொங்கலை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் சுருக்க முடியுமா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாகத்தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு எந்த மத அடையாளமும் கிடையாது. இப்பண்டிகையைக் கொண்டாடத் தமிழர் என்ற அடையாளம் மட்டும் போதும். இது ஒரு பண்பாட்டுத் திருவிழா. இயற்கை, சுற்றுச்சூழல், தமிழர் என இதனைக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் உள்ளன. இதனையெல்லாம் விடுத்து மதம், சடங்கு என இப்பண்டிகையைச் சுருக்கக் கூடாது. வழிபாடு, சடங்கு அவரவர் செயல்பாட்டில் இருக்கட்டும். பொங்கல் பண்டிகையில் அதனைக் கொண்டு வரவேண்டாம் என மதம் கடந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றுதான் அவர் பேசியுள்ளார்.
அவர் பேசியதின் சிறு பகுதியை மட்டும் வெட்டி திரித்து சமூக வலைத்தளத்தில் தவறாகப் பரப்பப்படுகிறது. பொங்கல் மதம் கடந்த பண்டிகை அதனை அனைத்து மதத்தினரும் கொண்டாட வேண்டும் என்றுதான் ஷாநவாஸ் கூறியுள்ளார்.
முடிவு:
முஸ்லிம்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமென ஆளூர் ஷாநவாஸ் கூறியதாகப் பரவும் தகவல் தவறானது. பொங்கல் மதம் கடந்த பண்டிகை அதனை அனைத்து மதத்தினரும் கொண்டாட வேண்டும் என்று அவர் பேசியதின் ஒரு பகுதியை வெட்டி திரித்துப் பரப்புகின்றனர்.