யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது போலியாக உருவாக்கப்பட்ட News Card ஆகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா நாடார்கள் தமிழர்கள் இல்லையென்றும் கூறியதாகவும், அதற்கு எதிர்வினையாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ’என் மீதும் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் உள்ள கோபத்தில் ‘நாடார்கள் தமிழர்கள் அல்ல’ என்று ஹெச்.ராஜா பேசுவது தவறு, இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று கூறியதாகவும் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் பெயரில் News Card ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது.
எச்ச க்கு வலுக்கும் எதிர்ப்பு.. pic.twitter.com/MYgNsXbiG0
உண்மை என்ன:
பரப்பப்படும் News Card-ல் தேதி 24/03/2025 என்றும் நேரம் மாலை 4 மணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இது குறித்துத் தேடினோம். அதில் இதுபோன்ற News Card ஏதும் பதிவிடப்பட்டிருக்கவில்லை. மாறாக, 24/03/2025 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்டச் செயலாளர்களுக்கு தவெக அறிவுரை என்றும், மாணவர் ஒருவர் பொதுத் தேர்வெழுதிவிட்டு வந்து தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்தது பற்றியும் தான் News Card பதிவிடப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை ஊடகத்தை அலைபேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது, ‘இதுபோன்ற செய்தி எதையும் நாங்கள் வெளியிடவில்லை’ என்று கூறினர்.

மேலும், இணையத்தில் தேடிய போதும், பொன்.ராதாகிருஷ்ணன் எச்.ராஜாவைக் கண்டித்து இப்படியொரு கூற்றைப் பேசியதாக எந்தவொரு செய்தி ஆதாரமும் கிடைக்கவில்லை.
மேலும் ’எச்.ராஜா - நாடார்கள் தமிழர்கள் இல்லை’ என்ற Keywords கொண்டு தேடியதில், பாலிமர் செய்தியின் யூட்யூப் பக்கத்தில் எச்.ராஜா பேசிய வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த மார்ச் 23ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அந்த வீடியோவில், ‘கால்டுவெல் ”திருநெல்வேலி சாணார்கள்” என்ற புத்தகத்தை எழுதிருக்கிறார். அதில் நாடார்கள் தமிழர்கள் இல்லை, அவர்கள் வந்தேறிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார். கால்டுவெல் நாடார்களை மதம் மாறச் சொன்னார். ஆனால் அவர்கள் மதம் மாறவில்லை. அதனால்தான் கால்டுவெல் நாடார்களை வந்தேறிகள் என்று கூறினார்’ எனப் பேசியிருக்கிறார்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, எச்.ராஜா நாடார் சமூக மக்களைத் தமிழர்கள் அல்ல என்று சொன்னதாகப் பரப்பப்படும் தகவல் திரித்துக் கூறப்பட்டதாகும். அதனைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் எச்.ராஜா-வுக்கு கண்டனம் தெரிவித்ததாகப் பரப்பப்படும் News Card போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.
முடிவு:
எச்.ராஜாக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்ததாகப் பரப்பப்படும் News Card போலியாக உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
