யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
மோடியின் பார்முலாவை அமெரிக்காவில் பின்பற்றிய ட்ரம்ப்..! #pmmodi #trump #shorts #viralvideo #viralnews

விரிவான விளக்கம்
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. அதற்கடுத்த நாளான, நவம்பர் 6ஆம் தேதி மாலையில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி, குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 279 இடங்களில் வெற்றிபெற்றுள்ளார் என்று செய்திகள் வெளியாகத் தொடங்கியது. இது ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை 270 இடங்களைவிட அதிகமாகும். இதன்மூலம், வரும் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இப்படி அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், TN NEWS24 குழுவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் “மோடியின் பார்முலாவை அமெரிக்காவில் பின்பற்றிய ட்ரம்ப்..!” என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, ”தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க வாழ் இந்து மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக டொனால்ட் டிரம்ப் மற்றும் எலன் மஸ்க் இருவரும் காவி நிற உடையணிந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்” என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்குச் சான்றாக டொனால்ட் டிரம்ப் மற்றும் எலன் மஸ்க் காவி உடையணிந்திருப்பது போன்ற புகைப்படமும் பதிவிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
டொனால்ட் டிரம்ப் மற்றும் எலன் மஸ்க் காவி உடையணிந்திருக்கும் புகைப்படத்தின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’DNA English’ என்னும் செய்தித்தளத்தில் இதுபற்றிய செய்தியை காணமுடிந்தது. இந்த செய்தியில், ’அமெரிக்க தலைவர்கள் இந்திய அரசியல்வாதிகள் போல் செயற்கை நுண்ணறவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்கள் இது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடுகையில், ‘Hindustan times’ பத்திரிகை நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத் ’இணையத்தில் சிறந்த meme ஒன்றை பகிந்திருக்கிறார்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, டிரம்ப் மற்றும் மஸ்க் இருவரும் காவி உடையணிந்திருக்கும் இந்த புகைப்படம் கேலிக்கையாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

மேலும், ‘True Media’ என்னும் தளத்தில் சோதனை செய்த போது, இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது நிரூபணமானது.

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ரோட் ஷோவில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


இதிலிருந்து, இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. இந்த புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு, ’அமெரிக்க வாழ் இந்து மக்களின் வாக்குகளை கவர்வதற்காக டொனால்ட் டிரம்ப் காவி உடையணிந்து பிரச்சாரம் செய்தார்’ என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது.
முடிவு:
இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. டொனால்ட் டிரம்ப் மற்றும் எலன் மஸ்க் ஆகிய இருவரும் காவி நிற உடையணிந்து பிரச்சாரம் மேற்கொண்டனர் என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது.