யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படத்தில் இருப்பது ஆமருவிப் பெருமாள் கோவிலின் வசந்த மண்டபம் ஆகும். மேலும் இந்தப் புகைப்படம் 2007-08ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம்.
பரவிய செய்தி
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்த இடமான ‘கம்பர் மேடு’ குப்பை மேடாகவும் மலம்,சிறுநீர் கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விரிவான விளக்கம்
மஞ்சள் நிறத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்த இடமாக இந்தியத் தொல்லியல் துறை அடையாளப்படுத்தி உள்ள இந்த இடம் தற்போது பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் இருப்பதாகவும், குப்பை மேடாகவும், மலம், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக பரப்பப்படுகிறது.
மேலும், கம்பர் மேடு என்றும் அழைக்கப்படும் இந்த இடத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாகவும் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
‘கம்பர் வீடு’ என்ற Keywords கொண்டு தேடுகையில், தேரழுந்தூரைச் சேர்ந்த ஆமருவி தேவநாதன் என்ற எழுத்தாளர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பதிவைக் காணமுடிந்தது.
முக்கியமான செய்தி:
தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் மாற்று மதத்தினர் அத்துமீறல், அவமரியாதை செய்துள்ளனர், கம்பர் வாழ்ந்த வீடு பாழ்பட்ட நிலையில் உள்ளது, கம்பர் மேடு கழிப்பிடமாக உள்ளது என்று வாட்ஸப் பதிவுகள் வலம் வருகின்றன.
ஆமருவிப் பெருமாள் பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தின்… pic.twitter.com/hjMmgj1oiN
இந்த புகைப்படத்தில் இருப்பது ஆமருவிப் பெருமாள் கோவிலின் வசந்த மண்டபம் என்றும் மேலும் இந்தப் புகைப்படம் 2007-08ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஆமருவிப் பெருமாள் கோவில் மண்டபத்தின் பழைய புகைப்படத்தை பயன்படுத்தி 'கம்பர் வாழ்ந்த பாழடைந்துள்ளது; கம்பர் மேடு கழிப்பிடமாக உள்ளது; மாற்று மதத்தினர் அத்துமீறல், அவமரியாதை செய்கிறார்கள்’ என்றும் வதந்தி பரப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு நடத்திய 9 நாள் 'கம்ப ராமாயண விழா'வும் அவ்விடத்திலேயே நடந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
இந்த கம்ப ராமாயண விழா குறித்து நாம் தேடியதில், மத்திய அரசின் ‘Press Information Bureau’ இணையதளத்தில், ஶ்ரீரங்கத்தில் கம்ப ராமாயண பாராயணம் நிகழ்ச்சி தொடர்பான செய்தியை காண முடிகிறது. அந்த செய்தியில் ‘30.3.2025 முதல் 6.4.2025 வரை கம்பர் பிறந்த கம்பர்மேட்டில் கம்பராமாயணம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது’ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
மேலும், 30.3.2025 முதல் 6.4.2025 வரை கம்பர் கோட்டத்தில் நடந்த இந்த ‘கம்ப ராமாயணம் விழாவில்’ ஆளுநர் பேசியது குறித்த செய்தியும் உள்ளது.
மேலும், பேஸ்புக் தளத்தில் ‘Amaruvi's Aphorismms’ என்ற பக்கத்தில், ‘கம்பர் மேட்டில் உள்ள கம்பர் வீட்டின் உண்மை நிலை’ என்ற வீடியோவை உள்ளூர் நபர்கள் வெளியிட்டதுடன், கம்பர் வீடு பாழடைந்த நிலையில் இருப்பதாக சொல்லப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
இதிலிருந்து, கம்பர் மேட்டில் உள்ள கம்பர் வீடு பாழடைந்த நிலையில் உள்ளதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்பது உறுதியாகிறது.
முடிவு:
தேரழுந்தூரில் உள்ள ஆமருவிப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தின் புகைப்படத்தை, பாழடைந்த நிலையில் இருப்பதாக தவறாக பரப்புகிறார்கள். மேலும், அந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக மத வெறுப்பை தூண்டும் வகையில் வதந்தி பரப்புகிறார்கள்.