யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் தாக்குதலில் தியா அல்-அடினி என்ற சிறுவன் இரண்டு கைகளையும் இழந்துள்ளான். இதனை ஹமாஸ் அமைப்புடன் தொடர்புப்படுத்திப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
ஹமாஸ், காஸா, பாலஸ்தீனத்தின் மேற்குறிப்பிட்ட துருக்கிய பயங்கரவாதியின் பெயர் முகமது மஹ்ரூப்! 7 அக்டோபர் 2024 அன்று இஸ்ரேல் மீதான தீவிரவாத தாக்குதலில் சிறு குழந்தைகளை துண்டு துண்டாக வெட்டி உலைகளில் சமைத்து சாப்பிட்டார்!
இஸ்ரேல் அவனது இரு கைகளையும் வெட்டி, ஒரு சிறுநீரகத்தை எடுத்து, அவனுடைய குழந்தைப் பேறு கருவிகள் அனைத்தையும் துண்டித்து, அவனை உயிருடன் விட்டுச் சென்றது, மற்ற பயங்கரவாதிகளும், காஸாவின் அனைத்து துருக்கிய மக்களும் அவனிடமிருந்து பாடம் கற்க வேண்டும்!

விரிவான விளக்கம்
காசா, பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த முகமது மஹ்ரூப் என்பவர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திப் பல குழந்தைகளைக் கொன்றதாகவும் இதற்கு பழி தீர்க்கும் விதமாக அவனது இரண்டு கை மற்றும் ஒரு சிறுநீரகத்தை இஸ்ரேல் நீக்கி அவனை உயிருடன் விட்டதாகவும் ஒரு இளைஞனின் புகைப்படம் பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. மேலும் அப்பதிவில், ’இனி இவன் அல்லா ஹு அக்பர் என்று சொல்லி எந்த மனிதனின் கழுத்தையும் வெட்ட முடியாது!’ என மத ரீதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், ‘Alamy’ என்ற புகைப்பட விற்பனை தளத்தில் அப்படம் இருப்பதைக் காண முடிந்தது. இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த தியா அல்-அடினி தனது இரு கைகளையும் இழந்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் அல்-கஸ்டல் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஆகஸ்ட், 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் காயமடைந்த 15 வயது தியா அல்-அடினிக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதி இல்லாததால், அவரது உயிரையாவது காப்பாற்றுவதற்காக கைகளை அகற்ற வேண்டியதாகியுள்ளது.

இச்சிறுவன் பற்றி Reuters, Arab News ஆகிய தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. அவற்றிலும் மேற்கண்ட செய்தியே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த செய்திகள் எதிலும் அவர் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்றோ அவரது பெயர் முகமது மஹ்ரூப் என்றோ எதிலும் கூறப்படவில்லை.

மேற்கண்ட தகவல்களிலிருந்து ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவரின் இரண்டு கைகளையும் இஸ்ரேல் துண்டித்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த முகமது மஹ்ரூப் என்பவரின் இரண்டு கைகளையும் இஸ்ரேல் துண்டித்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மை அல்ல.
பாலஸ்தீனம் அல்-கஸ்டல் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் தியா அல்-அடினி என்ற சிறுவன் இரண்டு கைகளையும் இழந்துள்ளார். அவர் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற தவறான தகவலுடன் மத ரீதியாக வெறுப்பு பிரச்சாரத்தையும் செய்கின்றனர்.