யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’ஆஷிகா பர்வீன்’ என்ற பெயர் ‘யாஷிகா’ எனத் தவறாக செய்தி வெளியிட்ட பாலிமர். அந்த தவறான செய்தியை கொண்டு மதப்பிரிவினை தூண்டும் வகையில் வலதுசாரிகள் பொய் செய்தி பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
முஸ்லிம் குடும்பத்தின் லவ் ஜிகாத் சதியால் வீழ்த்தப்பட்ட இந்து பெண் யாஷிகா மதம் மாற மறுத்ததால் சோற்றில் சயனைட் விஷத்தை வைத்து படுகொலை செய்த மாமியார். என்ன எழவெட்டுத்த மத கோட்பாடோ?
விரிவான விளக்கம்
இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றக்கூடிய குடும்பத்தில் மருமகளாகச் சென்றதாகவும் அப்பெண் மதம் மாற மறுத்ததால் மாமியார் விஷம் கொடுத்து மருமகளைக் கொலை செய்ததாகவும் வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்று பரப்பப்படுகிறது.
மதம் மாற மறுத்த இந்து பெண்ணை சைனைட் வைத்து கொலை செய்தாரா இஸ்லாமிய மாமியார்...!*
— லட்சுமி💃🚩 (@Deppaa2) September 2, 2024
கொலை செய்யப்பட்ட மருமகளின் பெயர்#யாஷிகா
எத்தனை பட்டாலும் நம்
இந்து பெண்களுக்கு
புத்தி வருவதில்லை,*
அரக்க கூட்டத்திற்கு வாழ்க்கை வாழப் போனால்
மரணம் தான் நிச்சயம் #NeedJusticeyaasnikaa pic.twitter.com/ZZDmwtBBTe
அப்பதிவில் பாலிமர் நியூஸ் வெளியிட்ட செய்தியின் புகைப்படம் ஒன்று உள்ளது. அதில், யாஷிகா என்ற பெண் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னதான் சொன்னாலும் இவர்கள் மதவெறி அடங்காது.. 😡😡😡
— 🚩 Ram Thevar 🚩 (@RamThevar9) September 2, 2024
மதம் மாற மறுத்த இந்து பெண்ணை சைனைட் வைத்து கொலை செய்தாரா இஸ்லாமிய மாமியார்...!
கொலை செய்யப்பட்ட மருமகளின் பெயர் : யாஷிகா#NeedJusticeyaasnikaa#LoveJihad pic.twitter.com/TD3gnKtEiP
உண்மை என்ன?
பரவக்கூடிய சம்பவம் குறித்துத் தேடியதில், இது தொடர்பாக ‘தி இந்து’, ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதைக் காணமுடிந்தது. 
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த இம்ரான் மற்றும் ஆஷிகா பர்வீன் இருவரும் காதலித்து 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி மாலை ஆஷிகா பர்வீன் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆஷிகா இறந்துவிட, விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனக் கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆஷிகா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 20 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் சயனைட் கொடுத்து ஆஷிகா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அனைத்து செய்திகளிலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ‘ஆஷிகா பர்வீன்’ என்றுதான் உள்ளது. ஆஷிகா பர்வீன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் பெயர் அப்துல் சமது - நிலோபர் நிஷா. மேலும் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய உறவினர்களும் இஸ்லாம் மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் அணியும் உடைகளை அணிந்திருப்பதை காணமுடிகிறது. அப்படி இருக்கையில் மதம் மாறச் சொல்லி ஏன் கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும்.
பரவக்கூடிய பதிவில் உள்ள பாலிமர் செய்தியில் இறந்த பெண்ணின் பெயர் ‘யாஷிகா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நேற்று இரவு (செப்.02) சுமார் 08.30 மணியளவில் பாலிமர் நியூஸ் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த செய்தியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ‘ஆஷிகா பர்வீன்’ என்று சரியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் யாஷிகா எனத் தவறாகக் குறிப்பிட்டு பிறகு ‘ஆஷிகா’ எனச் சரி செய்தார்களா என்பதை அறிய பாலிமர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதையும் இக்கட்டுரையில் இணைப்போம்.
இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் காதலித்து திருமணம் செய்தி மதம் மாற்றுகின்றனர் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை வலதுசாரிகள் தொடர்ந்து பரப்புகின்றனர். அத்தகைய பொய்ப் பிரச்சாரத்திற்கு ‘லவ் ஜிகாத்’ எனப் பெயர் வைத்து வதந்தி பரப்புகின்றனர். அப்படியான ஒரு பொய்தான் இதுவும்.
முடிவு:
இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை மதம் மாற கட்டாயப்படுத்தி முஸ்லிம் குடும்பம் கொலை செய்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. கொலை செய்யப்பட்ட ’ஆஷிகா பர்வீன்’ என்ற பெண்ணின் பெயரை ’யாஷிகா’ என பாலிமர் தவறாகச் செய்தி வெளியிட்டதைப் பயன்படுத்திப் பொய் செய்தி பரப்புகின்றனர்.