யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மலர்க்கோலத்தை அழித்த பெண் சிமி நாயர் என்னும் இந்துப் பெண். மதப் பின்புலம் இல்லாத ஒரு வீடியோ மதச்சாயம் பூசிப்பட்டு பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
பெங்களுரில் நடந்த ஒரு சம்பவம். 1000 இந்துக்கள் வாழும் இடத்தில் முஸ்லீம் கிருஸ்தவ குடும்பம் விருப்பம் போல தன் மதசம்பிராதயப்படி வாழமுடியும். அதே 100 கிருஸ்தவ முஸ்லீம் வாழும் இடத்தில் இந்துக்களால் தன் சம்பிரதாயப்படி வாழவே முடியாது. ஒருவன் சாத்தான் என்பான். ஒருவன் கபீர்கள் என்பான்

விரிவான விளக்கம்
பெங்களூரில் ஓணம் பண்டிகையையொட்டி போடப்பட்ட மலர்க்கோலத்தை பெண் ஒருவர் அழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில், இந்த மலர்க்கோலத்தை அழிக்கும் பெண் ஒரு முஸ்லீம் என்றும், இந்துகளை பண்டிகை கொண்டாடவிடாமல் முஸ்லீம்களும் கிருஸ்த்துவர்களும் தடுக்கிறார்கள் என்றும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வலதுசாரிகளால் பரப்பப்பட்டது.
உண்மை என்ன?
பெங்களூர், ஆர்.கே. ஹெக்டே நகரில் உள்ள குடியிருப்பில் ஓணம் பண்டிகைக்காக போடப்பட்ட மலர்க்கோலத்தை அழித்த காரணத்திற்காக பெண் ஒருவர் மீது பெங்களூர் சம்பிகேஹள்ளி பகுதி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்பதை
’The Times of India’ பத்திரிகை செய்தியின் மூலம் அறியமுடிகிறது. அந்தப் பெண் ’சிமி நாயர்’ என்னும் இந்துமதத்தைச் சேர்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மலர்க்கோலம் அவரது வீட்டு தாழ்வாரத்திலும் போடப்பட்டிருந்ததால் சிமி நாயர் அதை அழித்தார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ’The Indian Express’ செய்தியின்படி சிமி நாயர் மீது புகார் தெரிவித்தது ’பாத்திமா இஃபாதா ஷா’ என்னும் முஸ்லீம் பெண் என்பது தெரிய வருகிறது.

இதிலிருந்து இந்துகளை பண்டிகைகள் கொண்டாடவிடாமல் முஸ்லீம்கள் தடுக்கிறார்கள் என்று பரப்பப்பட்ட தகவல் பொய் என்பதை அறிய முடிகிறது.
மேலும், இதுபற்றிய keywords கொண்டு தேடுகையில் ‘மருநாடன் மலையாளி’ என்ற யூட்யூப் பக்கத்தில் கிடைத்த காணொளியின் படி, சமீபத்தில் வயநாட்டில் நடந்த கோரமான நிலச்சரவின் போது எந்தவித நிவாரண உதவிகளையும் செய்ய முன்வராத குடியிருப்புவாசிகள், ஓணம் மட்டும் கொண்டாடுவது சிமி நாயருக்கு பிடிக்கவில்லை. அதனால் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த சிமி நாயரை அவரது அனுமதி இல்லாமல் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அனுமதியில்லாமல் வீடியோ எடுக்கவேண்டாம் என்று சொல்லியும் தொடர்ந்து வீடியோ எடுத்ததனால் ஆத்திரமடைந்த சிமி நாயர் கோலத்தை அழித்ததாக தெரிய வருகிறது.
இவ்வாறு குடியிருப்புவாசிகளால் ஓணம் கொண்டாட்டத்திற்காக போடப்பட்ட மலர்க்கோலத்தை அழித்தவர் இந்துப் பெண் என்பதும், அவர் கோலத்தை அழித்தது தனிப்பட்ட காரணத்திற்காக மட்டுமே என்பதும் மேற்குறிப்பிட்டுள்ள செய்தி ஆதாரங்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இதில் மதம் சம்பந்தமான காழ்ப்பு எதுவும் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது. மதப்பிரிவினை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற பொய் செய்திகள் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது.
முடிவு:
ஓணம் பண்டிகையையொட்டி போடப்பட்ட பூக்கோலத்தை அழித்தது முஸ்லீம் பெண் என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது. அந்த பெண் ’சிமி நாயர்’ அவர் ஒரு ’இந்துப் பெண்’. இந்த சம்பவத்திற்கு எவ்வித மதப் பின்புலமும் இல்லை.