யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பள்ளி சீருடை அணிந்த குழந்தைகள் சிலர் சேறு நிறைந்த பாதையின் வழியே நடக்க முடியாமல் நடந்து வருவதை காட்டும் வீடியோ, தற்போது எடுக்கப்பட்டதல்ல. கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ!
பரவிய செய்தி
டம்மி அப்பாவின் சாதனை! கோபாலபுர_கோமாளி யின் ஆட்சியை எவரும் குறை சொல்ல முடியாது!! குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கின்றார்கள்!!! கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி
விரிவான விளக்கம்
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 02 அன்று தமிழ்நாட்டில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே கஷ்டப்படும் காட்சியைப் பாருங்கள் என்று கூறி 20 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில், பள்ளி சீருடை அணிந்த குழந்தைகள் சிலர் சேறு நிறைந்த பாதையின் வழியே நடக்க முடியாமல் நடந்து வருவதையும் தெளிவாகக் காண முடிகிறது. இதனை அதிமுகவினர் பலரும் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
#கோபாலபுர_கோமாளி யின் ஆட்சியை எவரும் ர
குறை சொல்ல முடியாது!!
குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கின்றார்கள்!!!
கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி #திமுக_கேடு_தரும் pic.twitter.com/HFERyZjpqR
#கோபாலபுர_கோமாளி யின் ஆட்சியை எவரும் ர
குறை சொல்ல முடியாது!!
குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கின்றார்கள்!!!
கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி #திமுக_கேடு_தரும் #EPSfor2026 #இரா_குமரகுரு #kallakuruchi_aiadmk_it_wing_sengurichi_akbar pic.twitter.com/jvWfSHdMUl
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் காட்சிகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இதே காட்சிகளைக் கொண்ட வீடியோ கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
மேலும் அப்பதிவுகளில், “மயிலாடுதுறை பள்ளி செல்ல திணறும் மாணவர்கள் சேறு நிறைந்த பாதையில் பயணம்...!!! 2 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று வரும் மாணவர்கள்..!!!“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே இது குறித்து மேலும் தேடியதில், வீடியோவில் இருப்பவர்கள் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செட்டிக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிய முடிந்தது. இது குறித்து கடந்த 2019-ல் விகடனில் வெளியிடப்பட்ட செய்தியில், “செட்டிக்கட்டளை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயக் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் ஓடக்கரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்குச் செல்ல ஓடக்கரை மண் சாலை மட்டுமே உள்ளது. 2 கி.மீ தூரமுள்ள இந்த மண் சாலை சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கற்சாலையாக மாற்றப்படவில்லை“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது எடுக்கப்பட்டது போல் பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், திமுக ஆட்சியில் சாலை வசதியில்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே கஷ்டப்படும் காட்சி என்று கூறி பரவி வரும் வீடியோ, கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.