யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் அமைந்துள்ள லக்ஷ்மிபூர் பகுதியில் உள்ள 15 கடைகளில் தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதனை தற்போது ஏற்பட்டுள்ள வங்கதேச கலவரத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
இது தலித் இந்து கடை. வங்கதேசத்தில் பயங்கரவாதிகளால் கடை எரிக்கப்பட்டது. எரிப்பு அல்லது கொலைக்கு முன் ஜாதி, மொழி பகுதியைக் கேட்க மாட்டார்கள். நீ ஒரு இந்து, இதுவே போதும். உயிருக்கு பாதுகாப்பு இல்லை இந்துக்களுக்கு..
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 33 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதன் பின்னணியில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அரசு இருந்ததன் காரணமாக, அங்கு தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து அங்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகமது யூனுஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வங்கதேச கலவர சம்பவம் என்று கூறி பல வீடியோக்கள் கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது தலித் இந்து கடை ஒன்று வங்கதேசத்தில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. மேலும் அதில் லக்ஷ்மிபூரில் உள்ள 'ராஜன் சந்திரா' என்ற இந்துவின் கடை தான் எரிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு பரப்பப்படுகிறது.
வங்கதேசத்தில் ஒரு இந்து தலித்தின் கடை பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது!
— Vinoth Arumugam (@vinothbjp100) August 7, 2024
எரிப்பு அல்லது கொலைக்கு முன் ஜாதி,மொழி பகுதியைக் கேட்க மாட்டார்கள் நீ ஒரு இந்து இதுவே போதும்!
சாதி வாரியாக இந்துக்கள் பிரிந்திருக்கும் வரை ஒன்றுபட முடியாது நம்மையும் காத்துக் கொள்ள முடியாது!#Bangladeshindus pic.twitter.com/rdvsC2mDF4
दलित हिन्दू राजन चंद्रा
— Deepak Sharma (@SonOfBharat7) August 7, 2024
की दुकान को जला🔥 दिया मुसलमानों ने
बांग्लादेश के लक्ष्मीपुरा में सूअर की तरह झुण्ड बनाकर आये मुसलमानों ने सड़क पे छोटी मोटी दुकान रखकर जिंदगी गुज़ार रहे दलित का सबकुछ छीन लिया.. उसकी दुकान को लूटकर आग लगा दी.
भारत के दलितों बोलो... अल्ला हू अकबर 🖐️ pic.twitter.com/GIjufaifQI
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘bd-bulletin’ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த மாதம் 11ஆம் தேதி “லட்சுமிபூரில் உள்ள மஜுசௌதுரி சந்தையில் 15 கடைகள் தீயில் எரிந்து நாசமானது” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில், “லக்ஷ்மிபூரில் உள்ள மஜுசௌதுரிர்ஹாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கடைகள் எரிந்து நாசமானது. தகவல் கிடைத்ததும் லஷ்மிபூர் தீயணைப்பு நிலையத்தின் 3 யூனிட்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஃபஜ்ர் தொழுகை (அதிகாலை தொழுகை) முடிந்த உடனேயே லக்ஷ்மிபூர் சந்தையின் தெற்குப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் வரவில்லை. இதற்கிடையே தீ மளமளவென பரவியது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கடையின் புகைப்படம், பரவி வரும் வீடியோவின் காட்சிகளோடு சரியாக பொருந்துவதையும் உறுதி செய்ய முடிகிறது.
இதன்மூலம் பரவி வரும் வீடியோ கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் அமைந்துள்ள லக்ஷ்மிபூர் பகுதியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், லக்ஷ்மிபூரில் உள்ள 'ராஜன் சந்திரா' என்ற இந்துவின் கடை தான் எரிக்கப்பட்டது என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், இந்து கடை ஒன்று வங்கதேசத்தில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது என்று பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
