யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2025 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் மூன்று வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்சியர் மகாபாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பரவிய செய்தி
பாலி*ல் வழக்கு கலெக்டர் சர்ச்சை பேச்சு! நாகை அருகே கடந்த வாரம் 3 வயது சிறுமி பாலி*ல் துன்புறுத்தலுக்கு உள்ளான கொடூர சம்பவத்தில், "அச்சிறுமி மீதும் தவறு உள்ளது, அது தான் காரணம்" என நாகை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சர்ச்சை பேச்சு.

விரிவான விளக்கம்
மயிலாடுதுறையில் மூன்று வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்சியர் மகாபாரதியின் பேச்சு என்று குறிப்பிட்டு நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் நியூஸ் கார்டில், “பாலி*ல் வழக்கு கலெக்டர் சர்ச்சை பேச்சு! நாகை அருகே கடந்த வாரம் 3 வயது சிறுமி பாலி*ல் துன்புறுத்தலுக்கு உள்ளான கொடூர சம்பவத்தில், "அச்சிறுமி மீதும் தவறு உள்ளது, அது தான் காரணம்" என நாகை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சர்ச்சை பேச்சு” என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் இது தற்போது நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை உறுதி செய்ய முடிந்தது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது. அதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசுகையில், குழந்தைகளை எவ்வாறு கையாள்வது, தவறு செய்யும் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் இருதரப்பு சூழ்நிலை என்ன என்பதையும் அறிய வேண்டும், மேலும் குழந்தைகளுக்கு அனைத்து நற்பண்புகளையும் பெற்றோர் போதிக்க வேண்டும் என்ற கருத்தினை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மூன்று வயது சிறுமியை உதாரணம் காட்டி பேசினார். பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்சியர் மகாபாரதியின் பேச்சு அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அப்போதே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இருந்த மகாபாரதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்தை புதிய மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பழைய செய்தியை, தற்போது பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், மயிலாடுதுறை பாலியல் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு எனப் பரவும் செய்தி, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பழைய சம்பவம் என்பது தெளிவாகிறது.