யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த கொலைச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் உள்ள சந்தாபுரம் என்ற பகுதியில் நடந்ததாகும்.
பரவிய செய்தி
வடக்கர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகுது. தமிழர்களை அழிக்காமல் திமுக ஓயாது.
சிறுமியை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற 2 வடமாநில இளைஞர்கள் - நடுங்கவைக்கும் சிசிடிவி.
விரிவான விளக்கம்
இரண்டு நபர்கள் சூட்கேஸை தூக்கிச் செல்லும் CCTV காட்சியை கொண்ட செய்தியை பதிவிட்டு, வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் தமிழ்நாட்டில் சிறுமியை கொன்று சூட்கேசில் எடுத்து சென்றதாகவும், திமுக ஆட்சியில் வடநாட்டவர்களின் குற்றச் செயல்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
வடக்கர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகுது 😡😡😡
தமிழர்களை அழிக்காமல் திமுக ஓயாது 😡😡😡
Innerline permit கொடுக்கிறதுல உங்களுக்கு என்னதான்டா பிரச்சனை 😡😡😡
சிறுமியை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற 2 வடமாநில இளைஞர்கள் - நடுங்கவைக்கும் சிசிடிவி pic.twitter.com/FCt419YqHW
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த செய்தி வீடியோவிலே இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்தது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் தந்தி டிவியின் Logo இருப்பதை காண்கிறோம். இதனால், ‘தந்தி டிவி’யின் சமூக வலைத்தளப் பக்கத்தில் தேடியபோது, அதன் யூடியூப் தளத்தில் கடந்த ஜீன் 9ஆம் தேதி அன்று இந்த செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த செய்தியிலே குறிப்பிட்டுள்ளதன் படி, 'பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பெங்களூருக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த மே மாதம் 21 அன்று நடந்ததாக சொல்லப்படுகிறது. ஓசூர் அருகே கர்நாடக எல்லையான சந்தாபுரத்தில் சிறுமியைக் கொன்று சூட்கேசில் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, காஞ்ச நாயக்கனஹல்லியில் தங்கி இருந்த வடமாநில இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். ஆஷிக் குமார், மகேஷ் ராஜ் பண்ஷி, இந்து தேவி, ராஜாராம் குமார், பிந்து குமார், ராஜூ குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது' என்று தெரிய வருகிறது.
'தந்தி டிவி' கடந்த மே மாதம் 21ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த போதே 'கர்நாடக மாநிலம் சந்தாபுரம் பகுதியில் சூட்கேஸில் இளம்பெண் சடலம்' என்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், '1 Tamil News' என்ற செய்தித்தளமும் இதே தகவல்களுடன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த கொலைச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் உள்ள சந்தாபுரம் என்ற பகுதியில் நடந்துள்ளது உறுதியாகிறது.
முடிவு:
கர்நாடக மாநிலத்தில் நடந்த கொலை சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள்.