
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
பரேலி செய்தி.
தவறு செய்த முஸ்லிம்களுக்கு காவல்துறையினர் அபராத ரசீது கொடுத்ததால் அவர்களை அடித்து உதைக்கின்றனர். இது சட்டத்திற்கு ஒரு சவால்! இந்தியாவில் அடுத்து என்ன நடக்கும் என்று இந்த வீடியோ சொல்கிறது. நாடு அதிக ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்துகிறது. pic.twitter.com/KSslHyfWnf
— Sowdha Mani (@SowdhaMani7) July 19, 2021

உண்மை என்ன ?
பரேலி பகுதியில் போலீஸ் அபராதம் விதித்ததால் முஸ்லீம்கள் போலீசை தாக்கியதாக இடம்பெற்றுள்ள நிலைத்தகவலை முன்பே பார்த்தது போல் இருந்தது. அது குறித்து தேடுகையில், 2021 ஜனவரி மாதம் இதேபோன்ற நிலைத்தகவல் உடன் வேறொரு வீடியோ வைரல் செய்யப்பட்டது. அதுவும் முஸ்லீம் என்றே பரப்பப்பட்டது. ஆனால், அது தவறாக பரப்பப்பட்ட வீடியோ என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : அபராதம் விதித்ததால் இஸ்லாமிய பெண் போலீசை தாக்கியதாக பரவும் பழைய வீடியோ !

தற்போது வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், 2021 மார்ச் மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் இவ்வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. ஹரியானா போலீஸ் தாக்கப்படுவதாகவே வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கொண்டு தேடுகையில் 4 மாதங்களுக்கு முன்பாக டைனிக் பாஸ்கர் எனும் இணையதள செய்தியில், " ஹரியானாவின் புன்ஹானா காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ஒரு வழக்கை விசாரிக்க ராஜஸ்தானின் பாரத்பூர் மற்றும் ஹரியானா எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஜுஹாராவிற்கு வந்துள்ளனர். சந்தையில் செல்லும் போது போலீஸ் வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதியது. இதையடுத்து, காரில் இருந்த இளைஞர்களுக்கும், போலீசிற்கும் இடையே மோதல் உண்டாகி கான்ஸ்டேபிளை அடித்து உதைக்கும் அளவிற்கு தீவிரமடைந்தது " எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரத்பூர் பகுதியின் ஐஜி பிரசன்ன காமேஷரா, " இந்த சம்பவத்தில் மத கோணம் இல்லை. நாங்கள் குற்றத்தின் தன்மையே பார்க்கிறோம், குற்றவாளியின் மதத்தைப் பார்க்கவில்லை. இந்த வீடியோ ஒரு தவறான கூற்றுடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது " என ஆல்ட் இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், பரேலியில் தவறு செய்த முஸ்லீம்களுக்கு காவல்துறையினர் அபராத ரசீது கொடுத்ததால் அவர்களை அடித்து உதைத்ததாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ எடுக்கப்பட்டது ராஜஸ்தான் மாநிலத்தில், தாக்கப்படுவது ஹரியானா போலீஸ், சம்பவத்திற்கு பின்னால் மத அடையாளம் இல்லை என அறிய முடிகிறது.