நிலாவிற்குச் சென்று வந்த நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்கே(Neil Armstrong) கூட 5 புகைப்படம் தான் எடுத்துக்கொண்டார். ஆனால் நம் பிரதமர் நரேந்திர மோடி கழிவறைக்குச் சென்றதற்கே 37 புகைப்படங்களை எடுத்துள்ளார் என ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தை திமுகவின் எம்எல்ஏவும், தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி ராஜா மற்றும் துணைச் செயலாளர் இசை உள்ளிட்டோர் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படம் குறித்து இணையத்தில் தேடியபோது, 2020 டிசம்பர் 20ம் தேதி அன்று சீக்கிய குருக்களில் ஒருவரான Sri Guru Teg Bahadur தகனம் செய்யப்பட்ட குருத்துவாரா ராகாப் காஞ் சாகிப்(Gurudwara Rakab Ganj Sahib) எனும் இடத்திற்குப் பிரதமர் மோடி சென்றுள்ளதை அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குருத்துவாரா சென்ற பதிவிலும், தற்போது வைரலானப் புகைப்படத்திலும் பிரதமர் மோடி ஒரே மாதிரியான மாஸ்க் மற்றும் உடைகளை அணிந்திருப்பதை நம்மால் கான முடிகிறது.
பொதுவாகக் குருத்துவாரா செல்லும் அனைவரும் தங்களுடைய கை கால்களைக் கழுவி விட்டுச் செல்லவார்கள். அதனையே பிரதமர் மோடியும் செய்துள்ளார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
முச்சல் சிச்ட்டர்ஸ்(Muchhal Sisters) எனும் யூட்யூப் பக்கத்தில் Trip to Gurudwara Rakabganj Sahib எனும் தலைப்பில் குருத்துவாரா ராகாப் காஞ் சாகிப்(Gurudwara Rakab Ganj Sahib) குறித்து ஒரு வீடியோ பதிவிட்டிருந்தனர். வீடியோவின் 14.05வது நிமிடத்தில் கை கழுவும் இடம் பதிவாகி உள்ளது. அதுவும் வைரலானப் புகைப்படத்தில் இருப்பதும் ஒரு மாதிரி இருப்பதை நம்மால் காண முடிகிறது.
பிரதமர் மோடி குருத்துவாரா செல்லும் முன் கை கழுவிய புகைப்படத்தைக் கழிவறைக்குச் சென்ற போதும் கூட புகைப்படங்களை எடுத்துள்ளார் எனச் சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கேமரா மீது பிரியம் கொண்டவர், கேமராக்கள் தன் மீது படும்படி நடத்துக் கொள்ளுவார் என்பது தொடர்பாக நடைபெற்ற சம்பவம் பற்றிய கட்டுரைகள் முன்பே பதிவிட்டு இருக்கிறோம். அதேபோல், கேமராவை வைத்து பிரதமர் மோடி தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகள் குறித்த கட்டுரைகளையும் வெளியிட்டு உள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி கழிவறையில் கூட கேமராமேனைக் அழைத்துச் சென்று 37 புகைப்படங்கள் எடுப்பதாகப் பரவி வரும் பதிவு தவறானது. அந்த புகைப்படம் 2020ல் குருத்துவாரா சென்ற போது எடுக்கப்பட்டது எனத் தெரிய வருகிறது.