யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமீபத்திய 2023 CRS அறிக்கையின் தரவுகளின் படி தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
பரவிய செய்தி
’இந்தியாவில் பிறப்பை விட இறப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்’ - News 18 தமிழ்நாடு.

விரிவான விளக்கம்
’இந்தியாவில் பிறப்பை விட இறப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம். தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை தான் அதிகமாக உள்ள என்று ’News 18 தமிழ்நாடு’ செய்தியை பதிவிட்டு, தமிழ்நாட்டில் மது பழக்கம் அதிகமாக இருப்பதால் தான் இவ்வாறு பிறப்பை விட இறப்பு அதிகமாக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.

உண்மை என்ன?
இந்தியாவில் பிறப்பு இறப்பு குறித்து விவரங்கள் ‘Civil Registration System’ன் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆவணமாக ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான CRS அறிக்கை தான் கடைசியாக வெளியிடப்பட்டது.


2023 CRS அறிக்கையில், ஒவ்வொரு மாநிலத்திற்கு மாவட்ட வாரியாக பிறப்பு இறப்பு குறித்த தரவுகள் இருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.


அதேபோல் 2022 CRS அறிக்கையின் படி, ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
மேலும், 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 9,02,718 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டில் தமிழ்நாட்டில் 6,93,205 இறப்புகள் பதிவு செய்யப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பிறப்பை விட இறப்பு குறைவாகவே இருக்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிறப்பை விட இறப்பு அதிகமாக இருப்பதாக ‘News 18 தமிழ்நாடு’ வெளியிட்டுள்ள செய்தி, 2021ஆம் ஆண்டிற்கான CRS அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த செய்தி 2025 மே மாதம் வெளியிடப்பட்டுள்ளது. 2022 CRS அறிக்கை 2025 ஜூன் மாதமும், 2023 CRS அறிக்கை 2025 அக்டோபர் மாதமும் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2021 கொரோனா பெருந்தொற்று நிகழ்ந்த ஆண்டு என்பதும் அப்போது நாடு முழுவதும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ‘News 18 தமிழ்நாடு’ இந்த செய்தியை வெளியிடும் போது 2022 CRS அறிக்கை வெளியாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, சமீபத்திய 2023 CRS அறிக்கையின் தரவுகளின் படி தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
முடிவு:
பழைய தரவுகளை கொண்டு தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிறப்பைவிட இறப்பு அதிகமாக இருப்பதாக திரித்து பரப்பி வருகிறார்கள்.