யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரு வழக்குகளிலும், மலையுச்சியில் (தர்கா அருகே) தீபம் ஏற்ற அனுமதி கோரியே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பரவிய செய்தி
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளின் கோரிக்கைகளும் ஒன்று அல்ல. வேறு வேறானவை - பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கோவை சத்யன்

விரிவான விளக்கம்
சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனியார் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா மற்றும் அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன் இருவரும், "திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளின் கோரிக்கைகளும் ஒன்று அல்ல. வேறு வேறானவை" என்று குறிப்பிட்டு பேசியுள்ளனர்.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளின் கோரிக்கைகளையும் ஆய்வு செய்து பார்த்தோம்.
அதன்படி, 1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண்: W.P. No 18884/1994), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரியே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
மேலும் அந்த வழக்கில் நீதியரசர் கனகராஜ் வழங்கிய தீர்ப்பில், “கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து O.S. No. 4/1920 வழக்கின் தீர்ப்பில் தர்காவிற்கு சொந்தமான இடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நெல்லித்தோப்பு, நெல்லித்தோப்பில் இருந்து மசூதிக்கு செல்லும் படிக்கட்டுகள், மசூதி, கொடிமரம் மற்றும் மலை உச்சி ஆகிய பகுதிகளை தவிர்த்து, தர்கா இடங்களில் இருந்து 15 மீட்டர் இடைவெளி விட்டு தீபம் ஏற்றிக்கொள்ளலாம்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண்: Mandamus Writ W.P. 19422 of 2014 & W.A. 1524 of 2014), கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் வழக்கமான இடத்தில் அல்லாமல் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்ற அனுமதி கோரியுமே ரிட் (Mandamus Writ) மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் அதில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது ‘ஆகம விதிகளுக்கு’ எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கோயில் முந்தைய ஆண்டுகளின் நடைமுறையின்படியே 05.12.2014 அன்று தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கோயில் தனது கடமையை நிறைவேற்றத் தவறவில்லை. மேலும், மனுதாரர் தனது தரப்பு வாதத்தையும், தீபம் ஏற்றுவது ஆகம சாஸ்திரங்களுக்கு எதிரானது என விரிவாக விளக்கவில்லை என்பதால் மனுதாரரின் ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்” என்றும் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கினர்.
எனவே இரண்டு வழக்குகளிலும் மனுதாரர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து பார்க்கையில், 1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரு வழக்குகளிலும், ஏற்கனவே தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிபிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றாமல், மலையுச்சியில் (தர்கா அருகே) தீபம் ஏற்ற வேண்டும் என அனுமதி கோரியே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், “திருப்பரங்குன்றம் விவாகாரம் தொடர்பாக 1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளின் கோரிக்கைகளும் ஒன்று அல்ல. வேறு வேறானவை” என பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கோவை சத்யன் பரப்பும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை என்பதை தெளிவாக அறிய முடிகிறது.