யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நேபாள நாட்டின் டல்லுவில் உள்ள நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் கடந்த செப்டம்பர் 09 அன்று தீ வைத்தனர். இதில் ஜலநாத் கானலின் மனைவி ரவி லட்சுமி பலத்த தீக்காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி உயிரிழந்ததாக் கூறி பல ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
பரவிய செய்தி
நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.
விரிவான விளக்கம்
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடங்கிய போராட்டம், ஊழல் எதிர்ப்பாகவும் மாறி அங்கு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. பின்பு அங்கு வன்முறை வெடித்து பிரதமர் இல்லம், நாடாளுமன்ற கட்டடங்கள் உட்பட பல முக்கிய இடங்கள் தாக்கப்பட்டன. தற்போது இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில், அவரது மனைவி ரவி லட்சுமி உயிரிழந்தார் என்று கூறி இந்துதமிழ்திசை, OneIndia தமிழ், Times of India உள்ளிட்ட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்புவதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், நேபாள செய்தி ஊடகமான “Khabarhub“ தளத்தில், “மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான ஜலநாத் கானலின் மனைவி ரபிலட்சுமி சித்ரகரின் உடல்நிலை, சமீபத்திய Gen-Z போராட்டங்களின் போது அவரது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்ததை அடுத்து, படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் கீர்த்திபூர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சித்ரகருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் முதலில் அனுமதிக்கப்பட்டபோது இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறார் என்று அவரது சிகிச்சை குழுவை வழிநடத்தும் தீக்காய நிபுணர் டாக்டர் கிரண் நகர்மி கூறினார்“ என்று குறிப்பிட்டு அதில் கடந்த செப்டம்பர் 17 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதே போன்று “Nepal Fackcheck” ஊடகமும், சித்ரகருக்கு சிகிச்சை அளிக்கப்படும் கீர்த்திபூர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கிரண் நகர்மியை தொடர்புகொண்டு, அவர் இன்னும் அங்கு சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்துள்ளனர்.
இதன் மூலம், நேபாள நாட்டின் டல்லுவில் உள்ள நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் கடந்த செப்டம்பர் 09 அன்று தீ வைத்தனர். இதில் ஜலநாத் கானலின் மனைவி ரவி லட்சுமி பலத்த தீக்காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி உயிரிழந்ததாக் கூறி இந்துதமிழ்திசை, OneIndia தமிழ், Times of India உள்ளிட்ட பல ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

முடிவு:
நம் தேடலில், நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி, அங்கு நடைபெற்ற கலவரத்தின் போது உயிரிழந்ததாக் கூறி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி தவறானவை என்பது தெளிவாகிறது.