யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் அகற்றப்பட்ட செய்தியை குமரன் குன்று கோவில் இடிக்கப்பட்டதாக ஊடகங்களும் இந்துத்துவ அமைப்பினரும் பொய் செய்தியை பரப்பிவருகிறார்கள்.
பரவிய செய்தி
‘திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய பழமையான கோவில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் வழிபட்டு வந்த இந்த கோவிலை திமுக அரசு இன்று இடித்துவிட்டது’ - அண்ணாமலை, பாஜக முன்னாள் தலைவர்.


விரிவான விளக்கம்
அரசு அதிகாரிகளால் ஒரு கோவில் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவதையும், அதனை எதிர்த்து சிலர் போராடுவதையும் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவிட்டு, ‘திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவில் உள்ளது. இந்த பிரசித்தி பெற்ற கோவிலுடன் தொடர்புடைய பழமையான செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் வழிபட்டு வந்த இந்த கோவிலை திமுக அரசு இன்று இடித்துவிட்டது’ என்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய கோவில் இது.
இந்த நிலையில்,… pic.twitter.com/zbKkfrqGAP
மற்றொருபுறம் இந்துத்துவ ஆதரவாளர்கள் ‘குமரன் குன்று’ கோவில் இடிக்கப்பட்டதாக பரப்பிவருகிறார்கள்.
திருப்பூர் பெருமாநல்லூர் குமரன் குன்று கோவிலை விடியா திமுக அரசு..!
பெரியவரின் அழுகை நெஞ்சை உலுக்குகிறது.!#kumarankundru #Tirupur #DMKFails pic.twitter.com/N7NmMnxcxI
உண்மை என்ன?
திருப்பூரில் கோவில் இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடியபோது, ‘தினத்தந்தி’ செய்தித்தளத்தில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவிலை அரசு அதிகாரிகள் அகற்றியதாக செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

'தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்' தெரிவித்துள்ளது படி, திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம் ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்காக 28.06.2024 அன்று இந்த இடம் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு மாவட்ட ஆட்சியரால் மாற்றம் செய்யப்பட்டது. இந்த இடத்தை ஆக்கிரமித்து 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முன் அனுமதியின்றி முருகன் சிலை வைத்து கொட்டகை போட்டு வழிபட்டு வந்துள்ளனர். இதனை தான் தற்போது மாவட்டம் நிர்வாகம் அகற்றியுள்ளது.

ஓராண்டுக்கு முன்னாள் தான் சிலை வைத்து வழிபாடு நடந்த தொடங்கியுள்ளனர் என்ற விவரத்திலிருந்து, இந்த கோவில் அண்ணாமலை சொல்வது பழைமையான கோவில் அல்ல என்பது தெரியவருகிறது.
ஆனால் இந்த கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்ட செய்தியை வெளியிட்ட தினமலர், ETV Bharat செய்தி ஊடகங்கள் ‘குமரன் குன்று கோவில்’ இடிக்கப்பட்டதாக தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர்.


மேற்கூறிய ஆக்கிரமிப்பு கோவில் அகற்றப்பட்டது பெருமாநல்லூர் பகுதியில் ஈட்டிவீரம்பாளையத்தில் நடந்தது. ஆனால் ’ குமரன் குன்று’ கோவில் என்று சொல்லப்படும் கல்யாண சுப்ரமணியசுவாமி கோயில் சம்பவம் நடந்த ஈட்டிவீரம்பாளையத்தில் இருந்து பல கி.மீ. தொலைவில் உள்ளது.
ஈட்டிவீரம்பாளையத்தில் கோவில் இடிக்கப்பட்டதை குமரன் குன்றில் கோவில் இடிக்கப்பட்டதாக தவறான செய்திகளை வெளியிட்டுள்ளது முன்னணி ஊடகங்கள். இதனையே இந்துத்துவ அமைப்பினரும் பரப்பி வருகிறார்கள்.
முடிவு:
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் அகற்றப்பட்ட செய்தியை குமரன் குன்று கோவில் இடிக்கப்பட்டதாகவும் அது தொடர்புடைய பழைமையான கோவில் இடிக்கப்பட்டதாகவும் தவறான செய்திகளை ஊடகங்களும் இந்துத்துவ அமைப்பினரும் பரப்பி வருகிறார்கள்.