யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது தொடர்பாக கடந்த 11ஆம் தேதி போரூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா என்பவரை தமிழ்நாடு போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த மறுநாளே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரவிய செய்தி
தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞன் இன்னும் கைது செய்யப்படவில்லை - பேசு தமிழா பேசு, யூட்யூப்

விரிவான விளக்கம்
நவம்பர் 10ஆம் தேதி, சென்னையில் நள்ளிரவில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை இன்னும் கைது செய்யவில்லை என்று பேசு தமிழா பேசு என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
இது குறித்து முதலில் தங்களை ஆய்வினை தொடங்கினோம். அப்போது விகடன் ஊடகத்தில் நவம்பர் 11 அன்று, “சென்னை: தூய்மைப்பணியாளரிடம் தவறாக நடந்துகொண்ட ஆந்திரா இளைஞர் - கைது செய்த காவல்துறை” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் ”சென்னை அடையாறு பாலம் அருகில் 50 வயது தூய்மைப் பணியாளர் ஒருவர் தூய்மைப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துக் கொண்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்தப் பெண், கையில் இருந்த துடைப்பத்தால் அந்த இளைஞரை சரமாரியாக அடித்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிவிட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போரூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா (25) என்ற இளைஞரைக் கைது செய்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் நக்கீரன் ஊடகத்தில் ”இளைஞரின் அருவருக்கத்தக்கச் செயல்; வெளுத்து வாங்கிய பெண் தூய்மை பணியாளர்!” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் ”போலீசார் விசாரணையில் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் இருந்த எண்ணை வைத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதன் அடிப்படையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பச்சு சாய் தேஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். 25 வயதான அந்த இளைஞர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்” எனக் கூறப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, சென்னை அடையாறு மேம்பாலம் அருகே தூய்மை பணியாளரிடம் பாலியல் அதுமீறலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா என்பவரை தமிழ்நாடு போலீஸார் கைது செய்துள்ளனர். இதனை மறைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தவறான தகவலை பேசு தமிழா பேசு என்ற யூட்யூப் பக்கம் பரப்பி வருகிறது.