யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிவராமன் என்பவர் அன்னதானம் செய்வதற்காக ஆடு வெட்டிய வீடியோ திரித்துப் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இப்படி நடக்கிறது. இது கலவரத்திற்கு வழிவகுக்கும். தயவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவும்.

விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி எனப்படும் ஆடு பலியிடும் சடங்கிற்கு எதிராக பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் மத ரீதியிலான பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.
Hello @tnpoliceoffl
This is happening in Arena of Meenakshi Amman Temple, Madurai. It can lead to riots. @Maduraidistpol1, Plz take necessary action 🙏🏻 pic.twitter.com/rGQpFoRHGC
இதன் தொடர்ச்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மாடு வெட்டப்படுவதாகவும் இதனால் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வீடியொ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
நாட்டார் தெய்வங்களுக்குக் கிடா, சேவல் வெட்டி படையல் போடுவது சிறு தெய்வ வழிபாட்டில் வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால், இந்த வீடியோவில் இருக்கும் நபர் யார்? எற்காக இதனைச் செய்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தோம்.
இது சிவராமன் என்பவர் மேற்கொண்ட நேர்த்திக்கடன் என்பதை அறிய முடிந்தது. இது குறித்துச் சாமியாடியாக உள்ள சிவராமனைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “ஆடு பலி கொடுத்து ஜாதி, மதம் பார்க்காமல் உணவு வழங்குவதை சுமார் 20 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். இப்படி ஆண்டுக்கு இரண்டு முறை உணவிட்டு வந்த நிலையில், தற்போது ஒருமுறை செய்து வருகிறேன். ஆனால், இந்த முறை இது குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
கிடா வெட்டி ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உணவு வழங்கிவதை வீடியோ எடுத்து, மாற்று மதத்தினர் மீனாட்சியம்மன் கோவில் அருகே மாடு வெட்டுவதாகவும், இது கலவரத்தை ஏற்படுத்தும் என்றும் வதந்தி பரப்பியுள்ளனர்.
முடிவு:
இந்து மதத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவர் ஆடு வெட்டி அன்னதானம் செய்வதை சுமார் 20 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். அந்த வீடியோவை மத ரீதியில் திரித்து வதந்தி பரப்பப்படுகிறது.