யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் கூட்டாக ஒரு சிறுமியை கடிக்கும் வீடியோ எனத் தவறாகப் பரவும் கேரளா வீடியோ!
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறுமியை கொடூராமாக கடிக்கும் 0:30 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
கடவுளே இருதயம் நின்னது போல் ஆகுது
— 🌷மினி மோகன்🌷(மோடியின் குடும்பம்) (@Mini52614198) July 22, 2024
இதுவாடா திராவிட மாடல் https://t.co/txH6qmEkGX
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை ஆய்வுசெய்து பார்த்ததில், இது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல என அறிய முடிந்தது. மேலும், இதுகுறித்து தேடியதில், NDTV இணையதளத்தில் கேரளாவில் 3 தெருநாய்களால் தாக்கப்பட்ட 8 வயது சிறுமி என்ற தலைப்பில் கடந்த வருடம் 2023 ஜுன் 20ஆம் தேதி செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதைக் காணமுடிந்தது.

அதில், கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் முழபிலாங்காடு பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தன. மேலும், இது தொடர்பாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து Mirror Now ஃபேஸ்புக் பக்கத்தில் 2023ஆம் ஆண்டு ஜுன் 20ஆம் தேதி செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அதில், ‘’கேரளா, கண்ணூர் | 8 வயது சிறுமியை தெருநாய்கள் தாக்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக, சிறுமி காயம் அடைந்தார்.’’ எனக் குறிப்பிட்டு இருந்தது.
மேலும், நியூஸ் 18 தமிழ்நாடு இணையதளத்தில் 2023ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் தேதி இச்சம்பவம் குறித்து செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. இதுமட்டுமின்றி, தெருநாய்க்கடி குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட தரவின்படி 2023ஆம் ஆண்டில் அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 4,35,136 பேரும், தமிழ்நாட்டில் 4,04,488 பேரும் நாய்க்கடிக்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் ஒரு சிறுமியை கடித்ததாகப் பரவும் தகவல் தவறானது எனத் தெளிவாகத் தெரிகிறது.

முடிவு:
நம் தேடலில், மூன்று தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறுமியை கடிக்கும் காட்சி என வெளியான வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. அது கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டதில் நடந்தது என அறியமுடிகிறது.
