யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நேபாளில் தேசிய வணிக வங்கியை கொள்ளையடித்த கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து அடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
அரசுக்கு ஆதரவாக போலி செய்திகளை பரப்பி வந்த நேபாளி கோடி மீடியா செய்தி சேனலின் முக்கிய 'ஆங்கர்' இவர் தான், இவரை மாணவர்கள் செய்ததை பாருங்கள்
கோடி மீடியா சேனல்களின் அறிவிப்பாளர்களுக்கு இந்த கதியை நாமும் எதிர் பார்ப்போமா???

விரிவான விளக்கம்
சமீபத்தில் நேபாள அரசு 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து அந்நாட்டின் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் விரைவிலே ஊழல் மற்றும் பிற சமூக பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது. ’Gen Z’ போராட்டம் என்று அழைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் ஆகிவற்றுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த போராட்டம் தீவிரமடைந்ததால் நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
இவ்வாறு நேபாள இளைஞர்கள் மத்தியில் ஆளும் அரசு மீதான அதிருப்தி உச்சத்தில் இருக்கும் இந்நிலையில், கூட்டத்திற்கு மத்தியில் கைகள் கட்டப்பட்டு ஒரு நபர் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் வீடியோவை பதிவிட்டு, ’இவர் நேபாள அரசுக்கு ஆதரவாக போலி செய்திகளை பரப்பி வந்த ஊடக தொகுப்பாளர் என்றும் இவரை நேபாள இளைஞர்கள் அடித்து சிறைபடுத்தியதாகவும்’ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’Space 4K Television’ என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 2025 செப்டம்பர் 10ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ‘தேசிய வணிக வங்கியை கொள்ளையடித்த நபரை உள்ளூர் மக்கள் பிடித்தனர்’ என்று நேபாளி மொழியில் எழுதப்பட்டிருப்பதைக் காணகிறோம்.

மேலும் தேடுகையில், ‘Artha Sarokar’ என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘நேபாளத்தில் நடைபெற்ற GenZ போராட்டத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு திருடர்கள் தேசிய வங்கியை கொள்ளையடித்தனர். அவர்கள் வங்கிக்கு தீ வைத்துவிட்டு நகையையும் பணத்தையும் திருடிச் சென்றனர்’ என்று குறிப்பிடப்படுகிறது.

மேலும், ’Trending Nepal Videos’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிர்ந்து, ‘Rastriya Banijya’ வங்கியை கொள்ளையடித்த கொள்ளையனை பொது மக்கள் பிடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ நேபாளில் வங்கியை கொள்ளையடித்த நபரை பொதுமக்கள் பிடித்து அடித்த போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
நேபாளில் தேசிய வணிக வங்கியை கொள்ளையடித்த கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து அடிக்கும் வீடியோவை, நேபாள அரசுக்கு ஆதரவாக போலி செய்திகளை பரப்பி வந்த ஊடக தொகுப்பாளர் இளைஞர்களால் தாக்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.