யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
25 நாய் இனங்களை தடை செய்த உத்தரவை ஒன்றிய அரசே அமல்படுத்தவில்லை. ஒருவேளை அமல்படுத்தப்பட்டாலும் ஏற்கனவே குறிப்பிட இன நாய்களை வளர்ப்பவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
இந்தியாவில் தடை செய்யப்பட்ட Cane Corso நாயை வளர்த்து வருகிறாரா சின்ன தத்தி உதயநிதி ?

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி, தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்நிலையில், ‘உதயநிதியின் வளர்ப்பு நாய் ‘Cane Corso’ இனத்தைச் சேர்ந்தது என்றும் இந்த நாய் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும், தடை செய்யப்பட்ட நாயை உதயநிதி வளர்த்து வருகிறாரா?’ என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட Cane Corso நாயை வளர்த்து வருகிறாரா சின்ன தத்தி உதயநிதி ? @grok https://t.co/URbcK1SC5j pic.twitter.com/b0QoDGTzcW
உண்மை என்ன?
இந்திய அரசு குறிப்பிட்ட சில வெளிநாட்டு நாய் இனங்களை தடை செய்துள்ளது குறித்து இணையத்தில் தேடினோம். இது தொடர்பாக ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் சார்பாக 12 மார்ச், 2024 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை காணமுடிந்தது. அதில், ராட்வீலர், தெற்கு ரஷ்ய ஷெப்பர்ட், கேன் கோர்சோ, பிட்புல் டெரியர் உள்ளிட்ட 25 நாய் இனங்களை இறக்குமதி செய்வது, இனப்பெருக்கம் செய்வது, விற்பனை செய்தல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வகை நாய்களை வளர்ப்பதற்கு, இனப்பெருக்கம் செய்வதற்கு, விற்பனை செய்வதற்கு கால்நடை பராமரிப்பு துறை உரிமம் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இவ்வகை நாய்களை ஏற்கனவே வளர்ப்பு நாய்களாக வைத்திருப்பவர்கள் இது இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க கருத்தடை செய்யப்படவேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தேடுகையில், ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி, ’இவ்வாறு தடை செய்யப்பட்ட நாய் இனங்களை ஏற்கனவே வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமம், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவரிடமிருந்து கருத்தடை செய்யப்பட்டதற்கான ஆவணம், முறையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆவணம் ஆகியவை இருக்கும் பட்சத்தில் இந்த நாய்களை வளர்க்கலாம் என்று தெரிவிக்கிறது.

இதே நாயின் புகைப்படத்தை 2024 மார்ச் மாதம் உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதிலிருந்து இந்த தடை வருவதற்கு முன்பாகவே இந்த நாயை உதயநிதி வளர்த்து வருகிறார் என்பது தெரிகிறது.
#Rowdy pic.twitter.com/g1nuCxoD1N
மேலும், மார்ச் 2024-ல் 25 நாய் இனங்களை தடை செய்யும் உத்தரவின் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், 2024 மே மாதம் பொது நோட்டீஸ் வெளியிட்டு பொது மக்களிடம் ஆட்சேபனைகள் மற்றும் அறிவுரைகளை கேட்டுள்ளோம் என்றும் ஒன்றிய அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2025 ஜனவரி மாதம் தெரிவித்துள்ளது.

இதிலிருந்து, 25 நாய் இனங்களை தடை செய்த உத்தரவை ஒன்றிய அரசே அமல்படுத்தவில்லை என்பதும், ஒருவேளை அமல்படுத்தப்பட்டாலும் ஏற்கனவே குறிப்பிட இன நாய்களை வளர்ப்பவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் தெளிவாக தெரிகிறது.
முடிவு:
மூர்க்கமான 25 நாய் இனங்களை தடைசெய்து ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை திரித்து, துணை முதல்வர் உதயநிதி தடை செய்யப்பட்ட நாயை வளர்ப்பதாக தவறாக பரப்புகிறார்கள்.