
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
இந்நிலையில், சவுதி அரேபியாப் பள்ளிகளில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிக்கப்படுகிறது என்று கூறி, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அப்பதிவுகளில், "சவுதி அரேபியாவில் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மாணவர்கள் இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இந்து இதிகாசங்களின் விவரங்களையும் கற்றுக்கொள்வார்கள்." என்றும் கூறப்பட்டுள்ளது. இதை கடந்த 2021ம் ஆண்டில் இருந்தே இந்தியா டுடே , நியூஸ் 18 , வியான் , ரிபப்ளிக் டிவி , யாஹோ இந்தி டிவி 9, ஏபிபி கல்வி , தி காஷ்மீரியத் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியாவில் பாடப் புத்தகத்தில், ராமாயணம், மகாபாரதம் சேர்ப்பு : pic.twitter.com/WceFaLlPZM
— Aru (@Ashokan007) January 22, 2024
Saudi Arabia includes Ramayana, Mahabharata in new curriculum for students.
The students of Saudi Arabia will now learn the details of Hindu epics like Ramayana and Mahabharata under the new curriculum.
As part of Prince Mohammed bin Salman’s new vision for the education… pic.twitter.com/OVmyGKIWpO
— JIX5A (@JIX5A) January 20, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், கடந்த 2021ல், பத்மஸ்ரீ விருதாளரும், சவுதி அரேபியாவில் அரபு யோகா அறக்கட்டளையை நடத்தி வருபவருமான "நௌஃப் அல் மர்வாய்" தனது எக்ஸ் பக்கத்தில் முதன் முதலில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தான், இந்த செய்தி கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது.

இது தொடர்பாக "சவுதி விஷன் 2030" பாடத்திட்டம் குறித்து ஏப்ரல் 25, 2016 அன்று இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை ஆய்வு செய்து பார்த்தோம். அதில், ராமாயாணம், மகாபாரதம் போன்ற இந்துமதம் தொடர்பான இதிகாசங்கள் எதுவும், சவுதி அரேபிய அரசின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதற்கான எந்தவொரு அறிவிப்புகளும் இல்லை.
மேலும் புதிய பாடத்திட்டத்தில், சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவது, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா போன்ற பொது சேவைத் துறைகளை மேம்படுத்துவது தொடர்பான பாடத்திட்டங்களே சேர்க்கப்பட்டுள்ளன என்பதையும் அறிய முடிந்தது.
افتتح سمو #ولي_ولي_العهد المؤتمر الصحفي لـ #رؤية_السعودية_2030 للحديث عن أبرز ملامح الرؤيةالوطنية المستقبلية للمملكة pic.twitter.com/KjyNKXo4d4
— رؤية السعودية 2030 (@SaudiVision2030) April 25, 2016
இது தொடர்பான எக்ஸ் பதிவிற்கு 2021ல் சவுதி அரேபிய ஆசிரியரான 'உமர் அல்-சபியின்' பதிலளிக்கையில், நான் 25 ஆண்டுகளாக இங்கு ஆசிரியராக இருக்கிறேன். சவுதி அரேபியாவின் பொதுக் கல்வியில், ஆங்கிலப்பாடத்தைத் தவிர மற்ற பாடங்களின் வினாக்கள் எல்லாம், அரேபிய மொழியிலேயே இருக்கும், ஆங்கில மொழியில் எந்த வினாக்களும் கேட்கப்படுவதில்லை. அதற்கு தடையும் உள்ளது. ஆனால் நீங்கள் பதிவு செய்துள்ள இந்தக் கேள்விகள் ஆங்கிலத்தில் உள்ளன. இது இங்கு இயங்கும் இந்தியப் பள்ளிகளில் வெளியிடப்பட்ட வினாக்களாக இருக்கும் என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது.
انا مدرس من ٢٥ سنة... النظام في التعليم العام يمنع وضع الأسئلة باللغة الإنجليزية الا لمادة اللغة الإنجليزية فقط... هذي الأسئلة ربما للمدارس الهندية
— عمر شافي السبيعي (@omar1393omar) April 25, 2021
மேலும் நௌஃப் அல் மர்வாய் பதிவு செய்துள்ள மற்றொரு பதிவில், தனது மகன் ஒரு சர்வதேச பள்ளியில் படிக்கிறார் என்றும், கேள்விகள் சவுதி அரேபியாவில் உள்ள கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெளிவுபடுத்தினார். மேலும் சவுதி அரேபிய அரசின் தேசிய பாடத்திட்டத்தை இது பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளார்.

இதன் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் மகாபாரதம் மற்றும் ராமாயணம் தொடர்பான பாடங்கள் குறித்து கேட்கப்பட்ட வினாத்தாள் ஒன்றின் புகைப்படம், சவுதி அரேபிய அரசின் பாடத் திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறி சமூக ஊடகங்களில் கடந்த 2021-ல் இருந்து தவறாக பரவி வந்துள்ளது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
மேலும் இது தொடர்பாக, சமூக ஊடகங்களில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது போன்று பரவும் புகைப்படம், 1,75,000 யாத்ரீகர்களை இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு கூட்டி செல்வது தொடர்பாக ஜனவரி 08, 2024 அன்று வெளியிடப்பட்ட செய்தி தொடர்பானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அண்டார்டிகாவில் ராமர் பிராண பிரதிஷ்டை கொண்டாட்டம் என எடிட் செய்த படத்தை வெளியிட்ட தினமலர் !
முடிவு:
நம் தேடலில், சவுதி அரேபிய அரசின் பாடத் திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இது சவுதியில் தனியாருக்கு சொந்தமாக உள்ள ஒரு சர்வதேச பள்ளி ஒன்றின் பாடத்திட்டமே தவிர, சவுதி அரேபிய அரசின் விஷன் 2030 திட்டத்தின் அங்கமாக தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.