யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை உயர்நீதிமன்ற இடத்தின் மீது ‘Easementary Right’ கோரப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
பரவிய செய்தி
சென்னை உயர்நீதிமன்றம் இருப்பது கன்னிகா பரமேஸ்வரி கோவில் சொத்து.. அவ்விடத்தில் வாடகைக்கு இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் 7 நுழைவாயிலும் பாரம்பரிய முறைப்படி இன்று இரவு மூடப்பட்டது. கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உயர்நீதிமன்றம் கட்டப்பட்டதால் ஆண்டில் ஒரு நாள் உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, சாவி கோயிலில் வைக்கப்படும் பாரம்பரிய நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.

விரிவான விளக்கம்
கடந்த நவம்பர் 23ஆம் தேதி, ’பாலிமர் செய்திகள்’ ஊடகம், ‘உயர்நீதிமன்றத்தின் அனைத்துக் கதவுகளுக்கும் பூட்டு’ என்ற தலைப்பில் ஒரு News Card வெளியிட்டிருந்தது. இதனை பதிவிட்டு, ”கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளதால், ஆண்டில் ஒரு நாள் உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, 24 மணி நேரத்திற்கு நீதிமன்ற வளாகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உயர்நீதிமன்றத்தின் வாயில்களை மூடி, சாவி கோயிலில் வைக்கப்படும் பாரம்பரிய நடைமுறை இன்றளவும் தொடர்கிறது” என்ற கருத்து ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
இது தொடர்பான Keywords-களைக் கொண்டு தேடியதில், ’The Hindu’ ஆங்கில செய்தித்தளத்தில் டிசம்பர் 09, 2018 என்று வெளியிடப்பட்ட ஒரு செய்திக் கட்டுரை கிடைத்தது. அதேபோல், இந்த தலைப்பையொட்டி, நவம்பர் 07, 2019 வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரை ஒன்றும் கிடைத்தது.

அதன்படி, ’இப்படி 24 மணிநேரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்படுவது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடப்பதாகும். பாரிஸ் கார்னரில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்திற்கு நான்கு பக்கமும் வாயில்கள் உள்ளது. இந்த வாயில்களைப் பொதுமக்கள் தினந்தோறும் பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி ஒரு குறிப்பிட்ட இடம் நீண்ட காலமாகப் பயன்பாட்டிலிருந்தால், அதனைப் பயன்படுத்தும் நபர்கள் அந்த இடத்தின் மீது ‘Easementary Right’ கோர வாய்ப்பிருக்கிறது.’
‘Easementary Right’ என்றால், குறிப்பிட்ட இடத்தின் சொந்தக்காரர் தனது இடத்தின் பயனை முழுமையாக அனுபவிக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள ’தனக்குச் சொந்தமில்லாத’ இடத்தின் மீதும் உரிமை கோர முடியும் என்பதாகும்.

எவ்வித தடையும் இல்லாமல், ஒரு இடம் பொதுப்பாதையாக பயன்படுத்தப்பட்டால், அதன் மீது ‘Easementary Right’ கோர பொதுமக்களுக்கு உரிமை இருக்கும். இதனை தவிர்ப்பதற்காகவும், நீதிமன்ற சொத்தின் மீது அதன் உரிமையை நிலைநாட்டவதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் சென்னை உயர்நீதிமன்றம் ஒருநாள் முழுவதும் பொதுமக்கள் நீதிமன்ற பாதையைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு இதனை நடைமுறைப்படுத்துகிறது.
வழக்காடுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்தவிதமான சிரமமும் ஏற்படாத வகையில் வார இறுதி நாட்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் இதற்கு மாறாக, கோவிலிருந்த இடத்தில் 130 ஆண்டுகளுக்கு முன்னாள் சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வாயில்களையும் அடைத்து சாவியைக் கோவில் தலைமை பூசாரியிடம் கொடுக்கும் வழக்கமிருப்பதாகச் கருத்துகள் பரப்பப்பட்டு வந்தது. டிசம்பர் 09, 2018 அன்று வெளியிடப்பட்ட ’The Hindu’ செய்திக் கட்டுரை இதனை முட்டாள்த்தனமானது என்று சொல்லி மறுத்திருக்கிறது.

இதிலிருந்து கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சாவியை ஒப்படைப்பதற்காக தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்படுகிறது என்பது பொய்யான தகவல் என்பது தெளிவாகிறது.
முடிவு:
கோவிலில் சாவியை ஒப்படைப்பதற்காக தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்படுகிறது என்று பரப்பப்படும் தகவல் பொய்யானதாகும். உயர்நீதிமன்ற இடத்தின் மீது ‘Easementary Right’ கோரப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.