யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
டில்லி பாபு என்ற இந்து ஆணுக்கும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நிகழ்ச்சி ஒன்றில் ஹிஜாப் அணிந்த மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ’எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு, ’முதல்வர் ஏன் இஸ்லாமிய மாற்றுத் திறனாளிக்கு மட்டுமே உதவி வழங்குகிறார். இஸ்லாமியர்களில் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்களா?’ என்று வலதுசாரி ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
’முதல்வர்’ ‘ஸ்கூட்டர்’ ‘நலத்திட்ட உதவிகள்’ ஆகிய Keywords கொண்டு இணையத்தில் தேடியதில், ‘ETV Bharat’ செய்தித்தளத்தில் இது குறித்து ஒரு செய்திக் கட்டுரையைக் காண முடிந்தது.
மார்ச் 3ஆம் தேதியன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர், முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 38,956 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த செய்தியில், விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் அருகில் இருக்க, மாற்றுத் திறனாளியான இஸ்லாமியப் பெண் ஒருவருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை முதல்வர் வழங்கும் புகைப்படத்தைக் காணமுடிகிறது.
இது குறித்து மேலும் தேடியதில், தமிழ்நாடு அரசின் ‘தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை’-ன் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. டில்லி பாபு என்பவர் தனக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் அந்த வீடியோ மார்ச் மூன்றாம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டில்லி பாபு என்ற பெயரும், அவர் நெற்றியில் விபூதி வைத்திருப்பதும் அவர் ஒரு இந்து என்பதை வெளிப்படுத்துகிறது.

இதிலிருந்து டில்லி பாபு என்ற இந்து ஆணுக்கும் ஸ்கூட்டர் வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. மேலும், அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் அழைத்துச் சிரமப்படுத்தாமல், சில பயனாளிகளுக்கு மட்டும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, நிகழ்ச்சி முடிந்து அடுத்த நாட்களில் மற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது பொதுவான வழக்கம்.
இதனைத் திரித்து இஸ்லாமிய மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகத் மதவாத கண்ணோட்டத்தில் திரித்துப் பரப்புகிறார்கள். மேலும் இஸ்லாமியர்கள் என்றாலே பாகிஸ்தானுடன் இணைத்துப் பேசுவது என்பது சங்கப் பரிவார இயக்கங்களின் முன்வைக்கும் இஸ்லாமிய வெறுப்பு மதவாதப் பார்வையாகும்.
முடிவு:
அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் சிரமத்திற்குள்ளாக்காமல் இருக்க ஓரிருவருக்கும் மட்டும் மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை திரித்து, இஸ்லாமிய மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கியதாகத் தவறாக பரப்புகிறார்கள்.
