யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாத்திடும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிதி ரூ.425 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 84 கோயில்களில் குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளன.
பரவிய செய்தி
தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு: ஒரு ஒப்பீடு.. தமிழக அரசின் சுயரூபம் மற்றும் நிலைப்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன?
விரிவான விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டிற்காகவும், பழமையான தேவாலயங்களை புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் பழமையான இந்து கோவில்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு இந்து முன்னணியினர் சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்றை பரப்பி வருகின்றனர்.
தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு: ஒரு ஒப்பீடு..
#TNBudget #TNBudget2026 #ThangamThenarasu #DMKGovt #CommentsPlease #HinduMunnani pic.twitter.com/mMyHBzZGyW
தமிழக அரசின் சுயரூபம் மற்றும் நிலைப்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன?@CMOTamilnadu @TThenarasu @mkstalin
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டிற்காக ரூ. 58 கோடியும், பழமையான தேவாலயங்களை புதுப்பிக்க ரூ. 25 கோடியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது உண்மையே என்பதை அறிய முடிந்தது.

இதைத் தொடர்ந்து பழமையான இந்து கோவில்களை புதுப்பிக்க ஆன செலவு குறித்து ஆய்வு செய்தோம். அதன்படி, 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில், 12,931 கோயில்களில் ரூ.8,100 கோடி மதிப்பிலான புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாத்திடும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிதி ரூ.425 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 84 கோயில்களில் குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளன” என்றும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் பழமையான திருக்கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாத்திடும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிதி ரூ.425 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டிற்காகவும், பழமையான தேவாலயங்களை புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் பழமையான இந்து கோவில்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு இந்து முன்னணியினர் பரப்பும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது.