யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, செனாப் நதி திறக்கப்பட்டபின் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதி.. 𝟭𝟬 பைசா செலவில்லாம மரண பயத்தை காட்டும் நரேந்திர மோடி ஜி..
விரிவான விளக்கம்
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதால் பாகிஸ்தானின் முக்கிய நதிகளில் ஒன்றான செனாப் ஆறு முற்றிலும் வற்றிப் போயுள்ளது.
இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் சுமார் 30% இந்தியாவுக்கும், மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கும் கிடைத்து வந்தது. இதைத்தான் இந்தியா தற்போது தடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தண்ணீர் குறைக்கப்பட்ட 4 நாளிலேயே பாகிஸ்தானின் முக்கிய நதிகளில் ஒன்றான செனாப் ஆறு வற்றிப் போனது.
இந்நிலையில் “மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதியின் காட்சிகளைப் பாருங்கள், பிரதமர் நரேந்திர மோடி செனாப் நதியை திறந்து விட்டதன் மூலம் பாகிஸ்தானியர்களுக்கு மரண பயத்தை காட்டியுள்ளார்” என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் வீடியோவில் தண்ணீரில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அடித்து செல்லப்படுவதையும் தெளிவாகக் காண முடிகிறது
மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதி..🌊🌊
"𝟭𝟬 பைசா செலவில்லாம மரண பயத்தை காட்டும் நரேந்திர மோடி ஜி."🔥 pic.twitter.com/9NxrX27El8
மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதி..🌊🌊
#OperationSindoor pic.twitter.com/1a3xwpeEWK
"𝟭𝟬 பைசா செலவில்லாம மரண பயத்தை காட்டும் நரேந்திர மோடி ஜி."🔥
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், கடந்த 2016-ம் ஆண்டில் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது சிந்து நதிகளில் பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்த இந்தியா முடிவு செய்தது என்பதை அறிய முடிந்தது. ஆனால் உலக வங்கி உட்பட சர்வதேச அமைப்புகளின் வேண்டுகோளால் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் செனாப் நதி ஒப்பந்தமும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையின் இரண்டு கதவுகளை இந்தியா இன்று (மே 08) மீண்டும் திறந்துள்ளது என்பதை “ANI” வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது.
ஆனால் செனாப் நதி நேற்றே திறந்துவிடப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தவறாகப் பரவி வருகிறது. எனவே பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்தோம்.
ஆய்வு செய்ததில், “hamidreza satar“ யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோ “ஆப்கானிஸ்தான் மலைகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம்” என்று குறிப்பிட்டு கடந்த மாதம் (ஏப்ரல் 14, 2025) பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
இதே போன்று “Hadi Afghan Company (هادی افغان شـــرکت)” என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் ஆப்கானிஸ்தானில் உள்ள பதக்ஷான் நகரத்தில் ஏற்பட்ட வெள்ளம் என்று குறிப்பிட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள பதக்ஷான் நகரத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து பல ஊடகங்களிலும் செய்தி வெளியிட்டுள்ளதையும் உறுதி செய்யமுடிகிறது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, செனாப் நதி திறக்கப்பட்டபின் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதியின் காட்சிகளைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் வீடியோ, ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.