யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சங்கரபதி கோட்டையை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ராணி மங்கம்மாளின் அரண்மனை 9 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுகிறது என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
படத்தில் நீங்கள் பார்ப்பது மருது சகோதரர்கள் வாழ்ந்து போர் பயிற்சி மேற்கொண்ட சங்கராபதி கோட்டை. இன்றைக்கு சிதிலமடைந்து அழியும் நிலையில் உள்ளது. இதை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தெலுங்கு ராணி மங்கம்மாளின் அரண்மனை 9 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுகிறது.
விரிவான விளக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கரபதி கோட்டை ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம். இந்த கோட்டையில் தான் மருது சகோதரர்கள், ராணி வேலுநாச்சியார் ஆகியோ போர் பயிற்சி மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சங்கரபதி கோட்டை இன்றைக்கு சிதைவடைந்து அழியும் நிலையில் உள்ளது. இதை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தெலுங்கு ராணி மங்கம்மாளின் அரண்மனை 9 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுகிறது என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், சங்கரபதிகோட்டையை புனரமைப்பு செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசு கடந்த 2023 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
அச்செய்தியில், “காரைக்குடி அருகேயுள்ள வரலாற்று சின்னமான சங்கரபதி கோட்டையை அரசு புனரமைத்து சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், 8 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் உள்ள சங்கரபதி கோட்டை ரூ.9.09 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைத்து புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவித்தது“, என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தேடியதில், கடந்த 2024-ல் சங்கரபதிகோட்டையை புனரமைப்பு செய்வதற்கான பணிகள் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தொடங்கப்பட்டது குறித்து புதியதலைமுறையில், கடந்த 2024 மார்ச் 05 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
இதன் மூலம், சங்கரபதி கோட்டையை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ராணி மங்கம்மாளின் அரண்மனை 9 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுகிறது என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கரபதி கோட்டையை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.