யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய வன்னியர்களால் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் திரௌபதியம்மன் கோயில் மீண்டும் மூடப்பட்டதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தியாகும்.
பரவிய செய்தி
மேல்பாதி திரவுபதி கோவில் மீண்டும் மூடல்.. வழிபாடு நடத்த எதிர்ப்பு.. திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டது..
விரிவான விளக்கம்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகில் உள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை என கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரச்சனை எழுந்தது. இது தொடர்பாக 7 சுற்று பேச்சுவார்த்தைகள் அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்டது. ஆனால் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க வன்னியர்கள் மறுத்துவிட்டதால் வருவாய் துறை அதிகாரிகளால் திரௌபதியம்மன் கோயில் 2023 ஜீலை மாதம் மூடப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று (17/04/25) திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டது. ஆனால் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த வன்னியர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் திரௌபதியம்மன் கோவில் திறக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டதாக 'பாலிமர் செய்திகள்' நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேல்பாதி திரவுபதி கோவில் மீண்டும் மூடல்.. வழிபாடு நடத்த எதிர்ப்பு.. திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டது..
#Viluppuram | #Temple | #Issue | #Police pic.twitter.com/x7M79hP6P7
உண்மை என்ன?
இந்த செய்தி குறித்து இணையத்தில் தேடுகையில், ‘ETV Bharat தமிழ்’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியை காணமுடிந்தது.
அந்த செய்தியில், '22 மாதங்களுக்கு பிறகு திரௌபதியம்மன் கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டதாகவும், மக்கள் தரிசனம் செய்ததாகவும்' குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'பட்டியலின மக்கள் கோயிலுக்குள்ளே செல்லக்கூடாது என மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், 'மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு 7.30 மணிக்கு மூடப்படுவது வழக்கம். வெள்ளிக்கிழமை மட்டும் மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் திறக்கப்பட்டு மூடப்படும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் 'தந்தி செய்தித் தொலைக்காட்சியின்' யூட்யூப் பக்கத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, 'காலை 7.30 மணியுடன் தரிசனம் முடிந்தது. அதனால் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது' என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தி ஆதாரங்களின் படி, திரௌபதியம்மன் கோயில் மீண்டும் திறக்கப்பட்ட தரிசனம் நடைபெற்றதாகவும், பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த வன்னியர்கள் தற்போதும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. ஆனால் வழக்கமான முறையில் குறிப்பிட்ட நேரம் தரிசனம் முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டதை திரித்து, பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கோவில் மீண்டும் மூடப்பட்டதாக சொல்லப்படுவது 'பாலிமர் செய்திகள்' ஊடகம் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.
முடிவு:
பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டது என்று 'பாலிமர் செய்திகள்' வெளியிட்டது திரிக்கப்பட்ட தவறான செய்தியாகும்.