யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அது தீபத் தூண் என்பதற்கு எவ்வித வரலாற்று ஆதாரங்களும் இல்லை.
பரவிய செய்தி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்திருப்பது தீபத்தூணே; வரலாறும் இதைத்தான் உறுதிப்படுத்துகிறது - S.G. சூர்யா பாஜக இளைஞரணி தலைவர்.
விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோவிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ‘தீபத் தூணில்’ கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் போலீஸார் மலையில் ஏற அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் திருப்பரங்குன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக பதற்றம் நிலவியது.
இந்நிலையில், சிக்கந்தர் தர்கா அருகில் இருக்கும் தூண் தான் தீபத் தூண் என்றும் 90 ஆண்டுகளுக்கு முன்பு வரை இத்தூணில் தான் தீபம் ஏற்றப்பட்டு வந்தது என்றும் பாஜகவை சேர்ந்த S.G.சூர்யா உட்பட பலர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூண் பற்றி வரலாற்று தகவல்கள் தேடினோம்.
‘திருப்பரங்குன்றம் வேற்கோட்டம்’ என்ற நூலில் தீபத்தூண் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை காண்கிறோம். அந்த புத்தகத்தில் தீபத் தூண் என்று குறிப்பிடப்பட்டிருப்பது கோவில் மரபுப்படி வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்தை தான் என்பது தெரியவருகிறது.

அப்புத்தகத்தில் மிகத்தெளிவாக ”காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் வழியில் பாதி மலைத்தொலைவில் ’தீபத்தூண்’ ஒன்றுள்ளது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தர்கா அருகே உள்ள கற்தூண் மலை உச்சியில் அமைந்துள்ளது. இவ்வாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள படி, பாதி மலையில் அமைந்திருப்பது கோவில் மரபுப்படி கடந்த பல நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபமே.

மேலும் உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபத் தூணில் தான் தீபம் ஏற்றுவது பற்றிய நாயக்கர் காலத்து கல்வெட்டு இடம் பெற்றுள்ளது. சிக்கந்தர் தர்கா அருகே உள்ள கற்தூணில் கல்வெட்டு ஏதுமில்லை.
மேலும் இந்த தீபத்தூண் தான் திருப்பரங்குன்றம் கோவில் மூலவர் கருவறையின் நேர் மேற்பகுதியில் அமைந்துள்ளது என்பதையும் அந்த புத்தகமே குறிப்பிடுகிறது. ஆனால் தர்கா அருகே உள்ள தூண் அப்படி அமைந்திருக்கவில்லை.

அதேபோல் அந்த புத்தகத்தில் இந்த தீபத்தூணை தாண்டி குன்றின் உச்சியில் தென்மேற்காக வளைந்து சென்றால் காசி விஸ்வநாதர் கோவிலை அடையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூண்ணிலிருந்து தென்மேற்காக சென்றால் காசி விஸ்வநாதர் கோவிலை அடையமுடியாது. ஏனெனில் காசி விஸ்வநாதர் கோவில் தர்வாவிற்கு எதிரான திசையில் மற்றொரு பாதையில் அமைந்துள்ளது.
நாயக்கர் ஆட்சி காலத்திலிருந்தே உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையால் வெளியிடப்பட்ட ”திருப்பரங்குன்றம்” என்ற நூலில், உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதையும், அதற்கான கல்வெட்டு ஆவணங்கள் அந்த தூணில் இருப்பதையும், அந்த தீப மண்டபம் என்று சொல்லப்படும் தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததையும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பில் தர்கா அருகே உள்ள தூணில் தீபமேற்ற உத்தரவு கொடுத்த போதும் அந்த தூணில் தீபமேற்றும் வழக்கம் இருந்ததாக எந்த உறுதிபடுத்தலையும் செய்யவில்லை.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூண் தீபத் தூண் இல்லை என்பதும், அதில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
எவ்வித வரலாற்று ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்ட சான்றுகளும் இல்லாமல் சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூண் தான் தீபத் தூண் என்றும் அதில் தான் 90 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தீபம் ஏற்றப்பட்டு வந்தது என்றும் பொய்யான தகவலை பாஜகவினர் பரப்பி வருகிறார்கள்.