யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இராணுவத்தினர் அடிக்கும் வீடியோவை இந்துக்கள் தாக்கப்படுவதாக மதப்பிரிவினையை தூண்டும் வகையில் பொய் செய்தி பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
பங்களாதேஷின் ஹிந்துக்களை (காஃபிர்கள்) தாக்கும் பங்களாதேஷ் ராணுவ வீரர்கள்..!
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு திருத்தத்தை எதிர்த்து அந்நாட்டு மாணவர்கள் அரசைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டம் கட்டுக்கடங்காத நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பித்தார்.
_பங்களாதேஷின் ஹிந்துக்களை (காஃபிர்கள்) தாக்கும் பங்களாதேஷ் ராணுவ வீரர்கள்..!😡😡😡_
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) August 13, 2024
_"முஸ்லிம்களுக்குள்ளேயே சகோதரத்துவம் இருக்குமே தவிர, அவர்களைத் தாண்டி மற்றவர்களிடம் சகோதரத்துவம் இருக்காது."_
_- *#டாக்டர்.அம்பேத்கர்🧡*_ pic.twitter.com/wavMn2XAqe
இந்நிலையில் அந்நாட்டு ராணுவம் அங்குள்ள இந்துக்களைத் தாக்குவதாக வீடியோ ஒன்றை வலதுசாரிகள் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், இதே வீடியோ கடந்த 9ஆம் தேதி ‘Shadhin bangladesh’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதை காணமுடிந்தது. அதில், கொள்ளையர்களை இராணுவம் தண்டிக்கிறது என்றும், இது வங்கதேசத்தின் Chittagong என்ற இடத்தில் நடந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துக்களை வங்கதேச இராணுவத்தினரால் தாக்கப்படுவதாக இந்த வீடியோ பரவிய நிலையில் இது பற்றி வங்கதேசத்தில் செயல்படும் fact check நிறுவனமான ’Rumor Scanner-ஐ’ சேர்ந்த சோஹனுர் ரஹ்மான் ஒரு பதிவிட்டுள்ளார். அதிலும் இராணுவத்தினர் கொள்ளையர்களையே தாக்குவதாகவும் இந்த சம்பவத்தை மதத்துடன் தொடர்புப்படுத்தி தவறான தகவல் பரப்பப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட தகவலை Rumor Scanner எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது. இவற்றிலிருந்து பரவக்கூடிய வீடியோவில் இராணுவத்தினரால் தாக்கப்படும் நபர்கள் கொள்ளையர்கள் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
வங்கதேச இராணுவத்தினர் இந்துக்களைத் தாக்குவதாகப் பரவும் விடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது கொள்ளையர்களை இராணுவத்தினர் தாக்கும் வீடியோ.