யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்துக்கள் கொல்லப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்பான வீடியோ.
பரவிய செய்தி
பங்களாதேஷில் கிராமங்களில் சிதறிக் கிடக்கும், யாருக்கும் ஒரு தீங்கும் விளைவிக்காத்த இந்துக்களின் உடல்களைப் பாருங்கள்.
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டுத் திருத்தத்திற்கு எதிராக ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பித்தார். பிறகு இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகப் பேராசிரியர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.
பங்களாதேஷ் . கலவரத்தில் 435இந்துகள் கொடுரமாக கொல்ல பட்டு உள்ளனர் என்று ஐ நா சபை மணித உறிமை ஆனையம் அறிக்கை.pic.twitter.com/qRTkAwFXgq
— மணிகண்டன் முதலியார் ⛳⛳⛳🔱🔱🔱🇳 (@W667DAf8eiSdq8L) August 18, 2024
இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுக் கொல்லப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் மக்கள் பலர் இறந்து கிடப்பதும், அவர்களின் உடைமைகள் சிதறிக்கிடப்பதையும் காணமுடிகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், இதே வீடியோவை ‘Uncensored News’ என்ற எக்ஸ் பக்கத்தில் கடந்த 7ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

அப்பதிவில் இராகினி மாநிலம் (Rakhine state) மவுங்டாவ் (Maungdaw) என்ற பகுதியில் அரக்கன் ஆர்மி 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை ட்ரோன் தாக்குதல்மூலம் கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி மியான்மரில் உள்ளது. பரவக்கூடிய வீடியோ மட்டுமின்றி அப்பகுதியில் எடுக்கப்பட்ட வேறு வீடியோக்களும் அந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.
மேற்கொண்டு இதுகுறித்து தேடியதில், CNN தளத்தில் கடந்த (ஆகஸ்ட்) 13ஆம் தேதி வெளியான கட்டுரை ஒன்றைக் காண முடிந்தது. மியான்மரில் ஜனநாயக முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை 2021-ல் இராணுவம் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மியான்மர் ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக உள்நாட்டில் பல குழுக்கள் இயங்க தொடங்கியது. அதில் ஒன்றுதான் ’அரக்கன் ஆர்மி’ என்ற குழு.
மியான்மர் ராணுவம் மற்றும் அரக்கன் இராணுவம் இரண்டு குழுவும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உடையவர்கள்.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி மவுங்டாவ் பகுதி வழியாக பங்களாதேஷ் செல்லமுயன்ற ரோஹிங்கியா முஸ்லிம்கள் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக CNN ஊடகத்திடம் ரோஹிங்கியா செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இத்தாக்குதலை அரக்கன் ஆர்மி செய்ததாகப் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனால், இச்சம்பவத்துக்கும் தங்கள் குழுவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென அரக்கர் ஆர்மி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இச்சம்பவத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதும் யார் தாக்குதலை நடத்தினர் என்பதும் உறுதிப்படுத்த முடியவில்லை என CNN கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து பரவக்கூடிய வீடியோ வங்கதேசத்தில் நிகழ்ந்ததில்லை என்பதும் அது மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ட்ரோன் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய வீடியோ.
