யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குளத்தில் குதித்து தப்பிய நபரின் பெயர் தக்ஜில் கலீஃபா காஜல். அவர் ஒரு முஸ்லிம். மேலும், அவாமி கட்சியை சேர்ந்த அவர் வங்கதேசத்தில் உள்ள அகௌரா நகராட்சியின் மேயராகவும் உள்ளார்.
பரவிய செய்தி
பங்களாதேஷின், இந்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஒரு குளத்தில் குதித்தார், பயங்கரவாதிகள் அவரை சூழ்ந்து கொண்டு தண்ணீருக்குள் கல்லெறிந்து கொன்றனர். சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களின் நிலைமை
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் சிவில் சர்வீஸ் வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் மாணவர்களின் போராட்டம் தொடங்கியது. போராட்டம் அசாதாரண சூழலை எட்டியதைத் தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டிலிருந்து தப்பித்தார்.
பங்களாதேஷ்,
— 🅟🅢𝕸𝖆𝖓𝖎𝖐𝖆𝖓𝖉𝖆𝖗𝖆𝖏𝖆𝖓மோடியின் குடும்பம் (@surabhi2003) August 10, 2024
இந்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்😭😭
தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு ஆத்மா குளத்தில் குதித்தது, பயங்கரவாதிகள் அவரை சூழ்ந்து கொண்டு தண்ணீருக்குள் கல்லெறிந்தே கொன்றனர்.
சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களின் நிலைமை ⏬️
pic.twitter.com/Jge7eESR2F
இந்நிலையில் இஸ்லாமியர்களால் தாக்கப்படும் இந்து ஒருவர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள குளத்தில் குதித்து தப்பி செல்கிறார். தண்ணீரில் குதித்த நிலையிலும் அவர் தொடர்ந்து கற்களால் தாக்கப்படுகிறார் என்று பாஜகவை சேர்ந்த அசோக் என்பவர் வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோ குறித்து இணையத்தில் தேடியதில், இதுதொடர்பாக Mzamin, The Daily Campus, Juktadhara தளங்களில் செய்தி வெளியாகி இருப்பதை காணமுடிந்தது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டில் இருந்து தப்பித்தார். அவாமி கட்சிக்காரர்களையும் அவர்களது வீடுகளையும் போராட்டக்காரர்களில் சிலர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
அப்படி அகௌரா நகராட்சியின் (Akhaura Municipality) மேயரும் அவாமி கட்சியின் முக்கிய பொறுப்பாளருமான Takjil Khalifa Kajal என்பவரை போராட்டக்கார்கள் சூழ்ந்த நிலையில், அவர்களிடம் இருந்து தப்பிக்க தண்ணீரில் குதித்து நீந்திச் சென்றுள்ளார்.
அவர் அப்படி தப்பிச் சென்ற வீடியோவுடன் ‘Jamuna TV’ என்ற யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து பரவக்கூடிய வீடியோவில் உள்ள நபர் அவாமி கட்சியை சேர்ந்த இஸ்லாமியர் என்பதை அறியமுடிகிறது.
ஆனால், வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களை இஸ்லாமியர்கள் தாக்குவதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்புகின்றனர். இப்படி வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பல பொய் செய்திகளும் வதந்திகளும் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது. அது குறித்த உண்மைகள் கட்டுரைகளாக யூடர்னில் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு:
வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் இணைந்து இந்து ஒருவரை தாக்குவதாகவும் அவர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள தண்ணீரில் குதித்து தப்பிப்பதாகவும் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது அவாமி கட்சியை சேர்ந்தவரான Takjil Khalifa Kajal என்பவர் போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ.