
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வீடியோவில் இருப்பவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி அசோக் சக்சேனா, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதால் சூரிய பகவான் ஆத்திரமடைவார் என்று கூறியுள்ளார். அதனால், தற்போது பாஜக ஆதரவாளர்கள் சோலார் தகடுகளை அடித்து...
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
சோலார் தகடுகளை உடைக்கும் வீடியோ தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் வைரலாகியுள்ளது. மார்ச் 28-ம் தேதி 2 லட்சம் பேரை உறுப்பினராக கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் குருப்-பில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு 18,000-க்கும் அதிகமாக ஷேர் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பது சூரிய பகவானுக்கு எரிச்சலை உண்டாகும் என்று பாரதிய கட்சியின் எம்.பி அசோக் சக்சேனா கூறியதைப் பற்றித் தேடுகையில், பாஜக எம்.பிக்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயரே இல்லை. அதே போன்று மற்ற எம்.பிக்கள் இப்படி ஏதாவது கருத்து கூறினார்களா? என்று பார்த்தால் அதற்கான எந்தவொரு பதிவும் இல்லை. மேலும், புகைப்படத்தில் இருப்பது உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பாஜக தலைவர் எம்.பி ஸ்ரீ மகேந்திர நாத் பாண்டே ஆவார்.
எனினும், இந்த புரளியை பாஜக எம்.பி கூறியதாக பாகிஸ்தான் நியூஸ் சேனலான நியூஸ் ஒன்னில் செய்தி வாசிப்பின் போது வீடியோவுடன் கூறியதால், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இதை பதிவிட்டுள்ளனர்.
சரி, எதற்காக இவர்கள் சோலார் தகடுகளை அடித்து உடைக்கிறார்கள் என ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடுகையில், இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளதாக செய்தி கிடைத்தது.
2018 பிப்ரவரி 15-ம் தேதி மகாராஷ்டிராவில் அமைந்துள்ள 100 MW சோலார் பிளான்டில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தினால் கோபமடைந்தவர்கள் அங்குள்ள சோலார் தகடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
Youtube link | archived link
இந்த சம்பவம் நடத்தது என்னவோ பிப்ரவரி மாதத்தில், ஆனால் மறுபுறம் குஜராத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ஜிக்னேஷ் மற்றும் ஹர்திக் படேல் ஆகியோர் நடத்தப்பட்ட சூறையாடல் என்று மோடி ஆதரவாளர்கள் வேறொரு கதையை கட்டி விட்டனர்.சோலார் தகடுகள் உடைக்கப்பட்டது உண்மையெனினும், அந்த வீடியோவுடன் தவறான செய்திகளை இணைத்து சமூக வலைதளங்களில் புரளிகளை பரப்பி வருகின்றனர்.
Update :
உத்திரப்பிரதேச பாஜக தலைவர் அசோக் சக்சேனா MP, "சூரிய ஒளியில் இருந்து (சோலார்) மின்சாரம் தயாரித்தால், சூரிய பகவான் எரிச்சல் அடைவதோடு,சூரிய பகவான் பலஹீனம் அடைகிறார்" என்ற அரிய கண்டுபிடிப்பை தெரிவித்தவுடன், பாஜக தொண்டர்கள் சோலார் பேனல்களை உடைக்கும் காட்சி. pic.twitter.com/f5cI7AtJuL
— தமிழர்.🌹🌾🌻🥀🌾🌻 (@BarisKhan16) February 19, 2020
Twitter link | archived link
கடந்த 2018 பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேச பாஜக தலைவர் மற்றும் எம்பியான அசோக் சக்சேனா சோலார் தகடுகளால் சூரிய பகவான் எரிச்சல் அடைவதாக கூறியதால் தொண்டர்கள் சோலார் தகடுகளை அடித்து நொறுக்கியதாக தவறாக பரப்பப்பட்ட வீடியோ 2020 பிப்ரவரி மாதம் மீண்டும் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆதாரமில்லாத, தவறான செய்திகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.