யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர விண்ணப்பம், கடைசி தேதி - நவம்பர் 30" எனப் பரவும் செய்தி போலியானது. தமிழ்நாடு அரசு இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பரவிய செய்தி
முக்கிய செய்தி! தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.
எங்கள் திட்டம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும், சொந்தமாக மடிக்கணினி வாங்க முடியாத, ஆனால் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த மடிக்கணினி தேவைப்படும் நபர்களுக்கு திறந்திருக்கும்.
விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன! விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கிவிட்டனர்.
காலக்கெடு:11/30/2025
*இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும்
https://dayer.fqrjx.xyz/59f94a00176430e0116dc0ccf6ff1.shtml?p=w

விரிவான விளக்கம்
தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு ரூ. 2,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பிரபல நிறுவனங்களில் லேப்டாப்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படுவதாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பதிவு செய்வதற்கான லிங்க் ஒன்றும் அதில் வழங்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் அந்த தகவலில் உள்ள லிங்க் குறித்து ஆய்வு செய்தோம். அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்ற போது, முதல் பக்கத்தில் தமிழ்நாடு இலவச மடிக்கணினிக்கு தகுதி பெற, கீழே உள்ள பதிவை முடிக்கவும் என்றும், குறைந்த வருமானம் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை மேம்படுத்த இலவச மடிக்கணினியைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு கிழே சென்ற போது, கல்வி நிலையை தேர்ந்தெடுக்கவும், மடிக்கணினி பிராண்டைத் தேர்ந்தெடுக்கவும், வயது வரம்பை தேர்ந்தெடுக்கவும் வயதை நிரூபிக்க கேள்விகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை நிரப்பிவிட்டு அடுத்த பக்கத்திற்கு சென்ற போது, உங்கள் விண்ணப்பம் பெறப்பட்டது. இலவச மடிக்கணினியைப் பெற நீங்கள் தகுதியுடையவரா என்பதை கீழே உறுதிப்படுத்தவும் என்று மற்றொரு பக்கத்திற்கு அழைத்து சென்றது. அந்த பக்கத்தில் இந்த லிங்கை 15 நண்பர்கள் அல்லது 5 குழுக்களுடன் பகிர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது தமிழ்நாடு அரசு இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை பார்க்கமுடிந்தது.

மேலும் இது குறித்து தேடிய போது, தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்திருந்ததை பார்க்கமுடிந்தது.
தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டத்தில் சேர விண்ணப்பம் என்று பரவும் போலி செய்தி !@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/K4hcZy8o9N
இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் பணத்தை இழந்திருந்தால், "1930" என்ற "சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்" மூலமாகவோ, www. cybercrime. Gov. in இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற போலியான ஃபிஷிங் இணையதளங்களை தவிர்ப்பதும் நல்லது.
முடிவு:
எனவே, "தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர விண்ணப்பம், கடைசி தேதி - நவம்பர் 30" எனப் பரவும் செய்தி போலியானது. தமிழ்நாடு அரசு இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.