யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் இந்துக்கோவில் ஒன்று தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறி, கோபுரத்தின் நடுவேயும், கோபுரத்தின் உச்சியிலும் சிலுவைகள் அமைந்திருப்பது போன்ற பழமையான கோபுரத்தின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்தே இதே புகைப்படம் “தமிழ்நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தும் கூட, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அதியமானில் கோவில் கலசம் சிலுவையாக மாற்றப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
பரவிய செய்தி
இது தேவாலயமா அல்லது கோவிலை தேவாலயமாக மாற்றியுள்ளார்களா?
X Link | Archieve Link
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் இந்துக்கோவில் ஒன்று தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறி, கோபுரத்தின் நடுவேயும், கோபுரத்தின் உச்சியிலும் சிலுவைகள் அமைந்திருப்பது போன்ற பழமையான கோபுரத்தின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Christians are nothing less than Mughals...
— King of Kings ❤️🔥❤️🔥 (@KINGS_4_EVER) July 2, 2024
A Temple changed as Church in Tamil Nadu ! pic.twitter.com/8KeyoXzgLs
Quiz:
— 🅚🅤🅜🅐🅡 𝕏 🅡🅐🅞 Ð (@kumarrao15) July 4, 2024
Is it a church or Did they convert temple into church? pic.twitter.com/5OtRlxzLBM
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்தே இதே புகைப்படம் “தமிழ்நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தும் கூட, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அதியமானில் கோவில் கலசம் சிலுவையாக மாற்றப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
Rajans’ Ministry Updates என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் “குற்றாலத்தில் உள்ள அழகிய NMSI யின் ஆசிரம தேவாலயம், ஒரு பழமையான தேவாலய வடிவம்!” என்று குறிப்பிட்டு பரவி வரும் இதே தேவாலயம் கடந்த 2013 அக்டோபர் 09 அன்றே பதிவிடப்பட்டிருந்தது. அதில் இந்த பழமையான தேவாலயத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன.

இதே போன்று Hindu Samayam என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும், கடந்த 2020 இல் இதே புகைப்படத்தைக் குறிப்பிட்டு, “உறுதிபடுத்தப்பட்டது. இந்த இடம் குற்றாலத்தில் NMSI CK Ashram என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.. Google map.. https://t.co/tULwL3VFk9” என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடியதில், விகடனில் “திருப்பத்தூர்: நூற்றாண்டை நெருங்கும் ஜெபாலயம்; மக்களுக்காக உழைத்த பெரியண்ணன், சின்ன அண்ணனின் கதை!” என்று குறிப்பிட்டு கடந்த 2022 மார்ச் 09 அன்று பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்றே திருப்பத்தூரில் காட்டப்பட்டுள்ள மற்றொரு தேவாலயம் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில், “திருப்பத்தூர் மாவட்டம் ஜோதிமங்கலம் என்னும் கிராமத்தில் உள்ள ஓர் கிறிஸ்துகுல ஆசிரமம் எனப்படும் தேவாலயம் நம் மண்ணின் கோயில்களைப் போலவே கட்டப்பட்டுள்ளது. குற்றாலத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஏசுதாசன் என்பவர்தான் பெரியண்ணன். ஸ்காட்லாந்து சென்ற இவர் ஸ்காட்லாந்து நாட்டில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த எர்னஸ்ட் போர்ரேச்ட்டர் பேட்டன் என்பவரை அங்கு சந்தித்தார். எர்னஸ்ட் போர்ரேச்ட்டர் பேட்டன், சின்னண்ணன் என்று அழைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் தங்களது வாழ்க்கையை முழுமையாக மக்களுக்கும் இறைவனுக்கும் அர்ப்பணித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து திருமணம் செய்து கொள்ளாமல் அனைத்து ஆசைகளையும் துறந்து மக்களுக்குச் சேவையாற்ற தமிழ்நாடு வந்தனர். வேலூர் மாவட்டத்திலிருந்த திருப்பத்தூருக்கு வந்த அவர்கள் நம் தமிழர்களின் கட்டிடக் கலை பாணியிலேயெ ஜெபாலயம் ஒன்றைக் கட்டி மக்களுடன் ஒன்றி வாழ திட்டமிட்டனர்.

இதற்காக 17.2.1928 அன்று அதற்கான அடிக்கல் நாட்டி உள்ளனர். சுமார் 5 ஆண்டுகள் பார்த்துப் பார்த்து வடிவமைத்து கோபுரங்களைக் கட்டி 9.6.1933 அன்று வேலைகளை முடித்துள்ளனர். இந்த ஜெபாலயம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில் இன்றளவும் ஒரு சேதம் கூட ஏற்படாமல் கம்பீரமாக நிற்கிறது. பெரிய அண்ணனான ஏசுதாசன் மற்றும் சின்ன அண்ணனான எர்னஸ்ட் போர்ரேச்ட்டர் பேட்டன் ஆகிய இருவரின் உடலும் ஆலயத்திற்குப் பின்புறத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு கல்லறையும் கட்டப்பட்டுள்ளது.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே ஏசுதாசன் மற்றும் எர்னஸ்ட் போர்ரேச்ட்டர் பேட்டன் குறித்து ஆய்வு செய்ததில், “The National Missionary Society of India” இணையதளத்தில் இவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

அதில், “எங்களுக்கு திருப்பத்தூரில் உள்ள மடவளம் மற்றும் குற்றாலத்தில் இரண்டு ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமங்கள் மறைந்த டாக்டர். சவரிராயன் ஜேசுதாசன், டாக்டர். எர்னஸ்ட் பாரஸ்டர் பாட்டன் மற்றும் டாக்டர். ராஜரத்தினம் சவரிராயன் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த இரண்டு மையங்களும் பண்டைய கட்டிடக்கலை கட்டமைப்புகளைக் கொண்ட தேவாலயங்களைக் கொண்டுள்ளன. இந்தியப் பண்பாட்டின் மீதான நமது முன்னோர்களின் ஈடுபாட்டிற்கு அவை சாட்சியாக நிற்கின்றன” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் The National Missionary Society of India என்ற அமைப்பு இந்தியாவில் 1905ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பரவி வரும் புகைப்படத்தில் உள்ள தேவாலயம் குற்றாலத்தில் உள்ளது என்பதையும், இதை டாக்டர். சவரிராயன் ஜேசுதாசன், டாக்டர். எர்னஸ்ட் பாரஸ்டர் பாட்டன் மற்றும் டாக்டர். ராஜரத்தினம் சவரிராயன் ஆகியோர் சேர்ந்து இந்துக்கோவில் வடிவமைப்பில் கட்டியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
இதே போன்று, திருச்சி, ஆந்திராவின் சித்தூர் போன்ற இடங்களிலும் பழமையான இந்துக்கோவில் வடிவமைப்பில் தேவாலயங்கள் கட்டப்பட்டு தற்போது வரை செயல்பாட்டில் உள்ளன என்பதையும் அறிய முடிகிறது.

மேலும் படிக்க: ராமநாதபுரத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் இந்து கோவிலா ? வரலாறு அறிக.
முடிவு:
நம் தேடலில், ‘தமிழ்நாட்டில் தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக் கோவில்’ என பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு வலதுசாரிகளால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிகிறது.