யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு இந்து ஆர்ய சமாஜ் மக்கள் இந்தியாவின் அகதிகள் என்று கூறியதற்காக வித்யானந்த் விதே என்பவர் நேருவை அறைந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மையல்ல.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு விழா ஒன்றில் பேசும் போது ‘இந்து ஆர்ய சமாஜ்’ மக்கள் இந்தியாவின் அகதிகள் என்று கூறியதாகவும் இதனை கேட்ட அவ்விழாவின் தலைமை விருந்தினர் வித்யானந்த் விதே நேருவை அறைந்ததாகவும் புகைப்படம் ஒன்று வலதுசாரிகள் மற்றும் மோடி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், ‘AP Image’ (Associated Press) தளத்தில் இதே புகைப்படம் இருப்பதை காண முடிந்தது. ‘Nehru almost falls’ என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருந்த அந்த புகைப்படம் 1962-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இது குறித்து தேடியதில், 1962, ஜனவரி 8-ம் தேதி ‘The Florence Times’ என்ற நாளிதழிலும் இந்த புகைப்படம் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.
பாட்னாவில் 1962-ல் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதமர் நேரு அதனை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார். அத்தகைய முயற்சியின் போது கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஏதுவாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரை பிடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்டதுதான் இந்த புகைப்படம்.

வித்யானந்த் விதே என்பவர் Ved-Sansthan என்ற அமைப்பை நிறுவியுள்ளார். இவர் நேருவை அறைந்ததாக எந்த செய்தியும் இல்லை.
இவற்றில் இருந்து முன்னாள் பிரதமர் நேருவை வித்யானந்த் விதே அறந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மையல்ல என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு இந்து ஆர்ய சமாஜ் மக்கள் இந்தியாவின் அகதிகள் என்று கூறியதற்காக வித்யானந்த் விதே என்பவர் நேருவை அறைந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மையல்ல. இப்புகைப்படம் 1962 காங்கிரஸ் கூட்டத்தில் ஏற்பட்ட அமலியின் போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேருவை பிடித்தபோது எடுக்கப்பட்டது.
